Saturday, May 18, 2019


சாஸோ எனும் ஆந்திர ஜெயகாந்தன்.




பழைய புதிய ஆந்திராவின் கலைத் தலைநகரமாக இருப்பது எப்போதுமே விஜயவாடாதான் என்று பலவருடங்களாய் எனக்குள் ஒரு நினைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. காரணம் விஜயவாடாவில் நான் இருந்த ஆரம்ப வருட கால கட்டங்களில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் கண்டு களித்தவன் என்கிற முறையிலும் என்னுடைய நாடகங்களுக்கு வெற்றிகரமான அடிக்கல் கொடுத்ததும் விஜயவாடாதான் என்பதாலும் இந்த நினைப்பு ஒருவேளை இருந்திருக்கும். சாவித்திரியிலிருந்து சில்க் ஸ்மிதா வரை தென்னகத் திரை உலகுக்குக் கொடையாகக் கொடுத்த ஊரும் விஜயவாடாதான். தெலுங்குத் திரையுலகின் மிகப் பிரசித்தமான என்.டி.ஆரும், ஏ.என்.ஆரும் இந்தப் பகுதியின் பக்கத்தில்தான் பிறந்தனர். தெலுங்கு சினிமாவில் இன்றளவும் போற்றிப் பாடப்படுகின்ற பின்னணிப்பாடகர் கண்டசாலா கூட இந்த பிராந்தியம்தான். திரைப்படங்களும் நாடகங்களும் மூச்சுக்காற்று போல விட்டு எடுத்துக்கொண்டுத் திரியும் மக்கள் நிறைந்த நகரம் விஜயவாடா.. நாங்கள் (நானும் நண்பன் தேவாவும்) நாடகம் போடும் சமயத்தில் நாடகப் பாத்திரங்களுக்காக அதுவும் பெண் கதாபாத்திரங்களுக்காகத் தேடி அலைந்த நாட்கள் விஜயவாடாவில் உண்டுதான்.

ஆனால் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் எத்தனைதான் விஜயவாடா கலைத் துறையில் புகழ்பெற்று விளங்கினாலும், தெலுங்கு இலக்கியத் துறையில்  அறிஞர்களின் நகரமாக ஆந்திராவில் வேறு ஒன்று இருப்பதைப் போகப் போகத்தான் புரிந்துகொண்டேன். அது ஆந்திராவின் வடகோடியில் இருக்கும் விஜயநகரம்தான். உண்மையில் ஆந்திர அறிஞர்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தால் விஜயநகரத்துக்காரர்கள் வெகு எளிதாக திறமையினை முன்னின்று காட்டி வென்று விடுவார்கள்தான்.

ஊர் என்னவோ மிகச் சிறிய ஊர்தான். ஆனால் ஊரிலுள்ள அத்தனை மக்களும் ஏதாவது ஒரு வகையில் தெலுங்கு மொழிக்கும் நாட்டின் பண்பாட்டுக்கும் மிகவும் உறுதுணையாக இருந்தார்களோ என்ற எண்ணம் கூட வரும். குருஜாடா அப்பாராவ் உட்பட எத்தனையோ சிறந்த இலக்கியகர்த்தாக்களை தெலுங்கு இலக்கிய உலகுக்கு அள்ளித்தந்த ஊர் விஜயநகரம்தான்.. புரட்சிகரமான கருத்துகள் முன்வைத்து அதி முக்கியமாக முதலாளிவர்க்கத்துக்கு எதிராக பேனாமுனைப் போர் நடத்தியவர்கள் விஜயநகரத்தார்தான். குருஜாடா அப்பாராவ், சாகண்டி ஸோமாயஜுலு, போன்றவர்கள் அந்த காலகட்டத்திலிருந்த சாதாரணமான ஏழைகளுக்காகவும் அந்தச் சமுதாயம் முன்னேறவும் எழுதிக்கொண்டே இருந்தார்கள்.

தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இணையாக தெலுங்கு இலக்கிய உலகில் பேசக்கூடிய, எழுதக்கூடிய எழுத்தாளர்தான் சாகண்டி ஸோமாயுஜுலு (Chaganti Somayajulu) என்கிற சாஸோ (ChaSo) அவர்கள். . அடித்தட்டு வர்க்கத்தோடு, மத்தியதர வர்க்கமும் பாகுபாடின்றி முன்னேறவேண்டுமென தன் எழுத்தை முழுவீச்சாகப் பயன்படுத்தியவர் சாஸோ. சமீபத்தில் இவருடைய நூறாண்டு கடந்த பிறந்தநாள் விழாவுக்கு என்னையும் அழைத்து சிறப்பித்தனர் சாஸோவின் குடும்பத்தார்.

சாஸோவின் குமாரத்தி சாகண்டி துளசியும் தற்காலத்து தெலுங்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். என்னுடைய வம்சதாரா புதினம் சமீபத்தில் தெலுங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிதும் வரவேற்கப்பட்டதைக் கேள்விப்பட்ட துளசி அம்மையார் ஒருநாள் திடீரென தொலைபேசி மூலம் சாஸோவின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அத்துடன் இல்லாமல் ‘‘உங்களுக்கு அப்பாவின் புத்தகம் ஒன்றினை அனுப்புகிறேன்.. அது இப்போதுதான் சாகித்ய அகடமியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. சாஸோவின் எழுத்துக்கள் பற்றியும் அவரைப் பற்றியும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும். நீங்கள் விழாவில் பேசுகிறீர்கள்’ என்ற அன்புக் கட்டளையிட்டதால் விஜயநகரம் வருவதாக ஒப்புக்கொண்டேன். 
விஜயநகரம் செல்வதற்கு இன்னொரு காரணம் அங்கே எனக்குப் பிடித்த பைடதல்லி அம்மனின் தரிசன வாய்ப்பு கிடைக்குமே என்பதாலும் கூட.. இங்கு தசராவுக்குப் பின்னர் வரும் ‘சிரிமானு’ உற்சவம் மிக மிகப் பிரசித்தமானது. (வம்சதாரா புதினத்தில் குறிப்பிட்டுள்ளேன்).

’சாஸோவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ என்ற தலைப்பில் தமிழில் ‘கௌரி கிருபானந்தன்’ மொழி பெயர்த்து சாகித்ய அகடமியால் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகத்தை அனுப்பி வைத்தார். இந்தப் புத்தகத்தை வெளியிடும் பாக்கியத்தையும் விழா மேடையில் வழங்கினார் துளசி அம்மையார்.

மனித உறவுகள் பொருளாதார ரீதியில் வேறுபட்டவை என்பதையும் சமுதாய ஏற்றதாழ்வுகள் அந்தக் காலத்தில் மலிந்து கிடந்ததையும் தனிமனிதரின் எண்ணங்கள் சீரடைந்தால் ஒழிய சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவது கடினம் என்பதும் இந்தச் சிறுகதைகளைப் படித்ததில் ஏற்படும் தாக்கத்தில் யாருமே உணர்ந்துகொள்ளமுடியும்.

சாஸோவின் எழுத்துகளும் ஜெயகாந்தனின் எழுத்துகளும் மிக அழகாக ஒத்துப் போவது எனக்கு ஆச்சரியம்தான். ஒருவரைப் போல மற்றொருவர் எழுதமுடியாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இருவர் எழுத்துக்களைப் படித்ததன் மூலம் இந்த ஆச்சரியத்தை உணர்ந்தேன்.ஜெயகாந்தன் எழுதிய  ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் சாஸோவின் சிறுகதைகளில் நிறைய இடங்களில் வரும். அதே வலுவான எழுத்து. ஒரே சீரான நடை. சமுதாயச் சீர்கேடுகளை மிகவும் வலுவாக வெளிக்கொணர்ந்து அதன் தராதரத்தினை ஆராய்ந்து பார்க்கும் எழுத்துகள்.
சாஸோ மிக தைரியமான எழுத்தாளராக இருந்திருக்கிறார். மேல்தட்டு வர்க்கத்தை அந்தக் காலத்தில் கேள்வி கேட்பதோ அவர்கள் ஏழைகளை சுரண்டி வாழ்வதையும் உல்லாச உற்சாக நடவடிக்கைகளை கேலி செய்தும் எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இவர்கள் எழுத்துகள் படிக்கப்படுவதே மேல்தட்டு வர்க்கத்தாலும், மத்தியதர வர்க்கத்தாலும்தான். ஆனால் சாஸோ தைரியமாக அவர்களிடமிருந்துகொண்டே அவர்கள் அவலங்கள் பற்றி எழுதியிருக்கிறார். சாஸோவின் எழுத்துகள் மிகவும் எளிமையானது. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நாட்டில் படிப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவான சதவிகிதம்தான் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஜெயகாந்தன் போலவே மத்தியதரவர்க்கத்தைப் பற்றிய நிறை குறைகள், அவர்களின் தனிப்பட்ட உணர்ச்சிகளின் சீரும் சிறப்பும், சீர்கேடும் அப்பட்டமானவகையில் சொல்லப்படுவது ஏராளமாகவே சாஸோவின் எழுத்தில் மலிந்து கிடக்கின்றன, சாஸோ சிறுகதை மன்னர் என்பதை அவரின் ஒவ்வொரு கதையும் தெளிவுபடுத்தும். பொண்டு மல்லலு, ஏலூரு வெள்ளாலி, பதிலி (கடிதக் கதை), லேடி கருணாகரம் போன்ற கதைகள் அக்கால சமுதாயத்தை நம் கண் முன்னே அப்படியே நிறுத்துகின்றன.

விஜயநகரத்தில் பெரிய நூலகம் குருஜாடா அப்பாராவ் பெயரில் அரசாங்கம் நிர்மாணித்துள்ளது. அந்த நூலகத்தின் மாடியிலேயே சாஸோ’வின் நினைவாக ஒரு அரங்கத்தையே நிர்மாணித்திருக்கிறார்கள் சாஸோவின் வாரிசுகள். இலக்கியவாதிகள் அடிக்கடி கூடும் இடமாக இந்த அரங்கம் அமைந்துள்ளது இன்னமும் விசேஷம்தான். கடந்த 2015 ஆம் ஆண்டில்தான் சாஸோவின் நூற்றாண்டு விழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடினார்களாம். சாஸோவின் பெயரில் ஒரு நினைவு விருதை நிறுவி ஆண்டுதோறும் தெலுங்கில் சிறந்த படைப்பாளி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு பரிசும் நிதித் தொகையும் வழங்கிவருகிறார்கள். இந்த விழாவின் போது கூட இந்த நற்செயல் தொடர்ந்தது. விஜயநகரத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள கடப்பாவிலிருந்து வேம்பள்ளி ஷெரீஃப் எனும் இளைஞரை வரவழைத்து அவர் எழுதிய ‘ஜும்மா’ எனும் நூலுக்காக விருது வழங்கினார்கள். ஷெரிஃப் ஏற்கனவே யுவஸாகித்ய விருதினைப் பெற்றவர் என்றாலும் சாஸோவின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவு விருது என்பது அவருக்கு மிகவும் மேன்மையாகப் பட்டது. இதிலிருந்தே சாஸோ எழுத்துகளின் மேன்மை கூட நமக்கு வெளிப்படுகின்றது.

சாகண்டி துளசி அம்மையாரின் அன்பும் ஆளுமையும் எனக்குப் பிடித்திருந்தது. அங்கு உள்ளோர் அனைவருமே துளசி அம்மையாரை தங்களின் சொந்த உறவாகப் பாவித்து மரியாதை செய்வதைப் பார்த்து மனம் மகிழ்ச்சியுற்றது, அதற்குக் காரணம் சாஸோவா, அவரின் மேன்மையான எழுத்துகளா,  அல்லது தந்தையின் எண்ண ஆளுமைகளை அப்படியே தன்னுள் பாவித்துக் கொண்டு தனக்கென ஒரு பாணி வைத்துக் கொண்டு எழுதிவரும் துளசியின் திறமையா என்பதையெல்லாம் சட்டென முடிவெடுத்துச் சொல்லமுடியாது.

ஆந்திர ஜெயகாந்தனின் அன்பு வாரிசுக்கு என்றென்றும் வாழ்த்துகள் என்று மட்டும் சொல்லமுடிந்தது.





Top Image no.1 - The symbolic fort tower of Vizianagaram
2. Writer Chaganti Somayujulu
3. Pydathalli Ammavaru Temple
4. Dr. Chaganti Tulasi
5 and 6. Function photos.
first image to 4th one - Thanks to Google
5 and 6 - Self.

Monday, February 25, 2019

அடுத்த வீட்டில் வம்சதாரா

அடுத்த வீட்டில் வம்சதாரா


உண்மையாக சொல்லப்போனால் என்னுடைய வம்சதாரா புதினமே அடுத்த வீட்டுச் சொந்தம்தான். வட ஆந்திரப் பகுதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் மொழிப் புதினம் தமிழில் வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டு சொந்த வீட்டுப் பெண்ணாக சமீபத்தில் தெலுங்கு மொழி மூலம் தன் பிறந்த இடமான விசாகப்பட்டினத்தில் வம்சதாரா அறிமுகம் செய்யப்பட்டாள். எழுத்தாளர் பெரியவர் சுஜாதா இன்றிருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். ஆனந்தவிகடனில் 2004 ஆம் ஆண்டு வம்சதாரா பற்றி எழுதும்போது திவாகர் இதை தெலுங்கிலும் மொழிபெயர்க்கவேண்டும் என்று முத்தாய்ப்பு வைத்தவராயிற்றே!!

என் மனைவி சஷிகலா ’வம்சதாரா’ மொழிப் பெயர்ப்பினை நான்கு ஆண்டுகளுக்கு முன்னமேயே சாதாரணமாக முடித்திருந்தாலும் திருத்தங்கள் திருத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. காரணம் தெலுங்கு வாசகர்கள் ஒரு சரித்திர புதினத்தை எந்த வகையில் எடுத்துக் கொள்வார்களோ என்கிற தயக்கம் ஏராளமாக இருந்தது. இதுநாள் வரை தெலுங்கு இலக்கிய உலகில் தெலுங்கு மண்ணில் நடந்த சரித்திரக் கதை என்ற ஒன்று புதின வடிவில் வெளிவராமல் இருந்தது. ஒரு சில தெலுங்கு புலமையாளர்களிடம் வம்சதாரா கதையினை அப்படியே கொடுத்துப் படிக்க செய்தோம். படித்தார்களா என்பதே தெரியவில்லை. மிகக் கனமான அந்த ஃபைலை நீண்டநாட்கள் தன் வசம் வைத்திருந்து திருப்பிக் கொடுக்கும்போது ‘ஆஹா.. நன்றாக இருக்கிறது’ என்கிற சான்றிதழாகப் ஏதோ நல்ல வார்த்தை பேசிக் கொடுத்தார்கள். பதிப்பாளர்கள் கிடைப்பார்களா எனத் தெரியாமல் இருந்தது.  இது என்னுடைய அவநம்பிக்கையை இன்னும் பெரிதாக்கியது என்பதுதான் உண்மை.

இந்த நிலையில்தான் விசாகப்பட்டினம் ’ஸஹ்ருதய ஸாஹிதி’ என்கிற இலக்கிய ஆர்வலர்கள் குழுமம் என்னை என் தமிழ் புத்தகங்கள் குறித்து பேச அழைத்திருந்தார்கள். அந்த இடத்தில்தால் திருவாளர் டாக்டர் வேணு அவர்களைச் சந்தித்தேன். திரு வேணு மிக உன்னத நாடக் எழுத்தாளர்,  கவிஞர். சிறுகதை எழுத்தாளர். ஆந்திர பல்கலைக்கழக கல்லூரியை நிர்வகித்து சமீபத்தில் ஓய்வுபெற்றவர். அவரிடம் எதேச்சையாக வம்சதாரா குறித்துப் பேசும்போது அந்தப் புதினம் மொழிபெயர்க்கப்பட்டு திருத்தப்படாத நிலையில் அப்படியே இருக்கிறது என்றும் சொன்னோம். ‘நான் ஒரு முறை படிக்கத் தரமுடியுமா’ எனக் கேட்டார். மிகப் பெரிய ஃபைல் வடிவத்தில் இருந்த வம்சதாராவை என் வீட்டுக்கே வந்து எடுத்துச் சென்றார். டில்லி செல்வதாகவும் இருபது நாட்களில் படித்துவிட்டு தன் கருத்தைச் சொல்வதாகவும் எடுத்துச் செல்லும்போது சாதாரணமாகத்தான் நினைத்தோம். சரிதான் என்று தலையசைத்து  வழியனுப்பிவைத்தோம் கூட.

ஆனால் திரும்பி வந்தவர் சும்மா விடவில்லை. இந்தக் கதையை உடனடியாக ஸஹ்ருதய ஸாஹிதி அமைப்பின் அடுத்த கூட்டத்தில் பேச இருப்பதாகவும் நீங்கள் இருவரும் அங்கு வரவேண்டும் என்றும் தன்னுடைய கருத்தை அங்கே தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். நாங்களும் சென்றோம்.


ஆச்சரியம்தான். இப்படி ஒரு அழகான ஆழமான சரித்திரக் கதையை தான் இதுவரை படிக்கவில்லையென்றும் தெலுங்கு இலக்கிய உலகில் இந்தப் புத்தகம் பதிக்கப்பட்டு வாசகர்வசம் கொண்டுவரப்பட்டால் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்றும் சொல்லிவிட்டு கதையை, அதுவும் முழுக் கதையை சபைக்கு விவரித்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார். வம்சதாராவை, வினயனியை, மணிவாணனை மறக்க முடியாத நிலை ஏற்பட்டதை விவரித்தார் வட ஆந்திரத்தின் தொளாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மிகப் பெரிய நிகழ்வை மிகப் பெருமையாக எழுதப்பட்டதை விவரித்தார். அவர் புகழுரையில் மதி மயங்கிப் போனோம்தான்.

ஆனால் இந்தப் புகழுரை எல்லாம் மாயையாகத்தான் தோன்றியது. அவர் பாராட்டுதலுக்கு நன்றிதான். ஆனால் இந்தப் புத்தகம் வெளியாக வேண்டுமானால் அங்குள்ள தெலுங்கு புத்தகப் பதிப்பாளர்கள்தான் முன்வரவேண்டும். ஏறத்தாழ 560 பக்கங்கள் கொண்ட வம்சதாராவை பதிப்பிக்க தெலுங்கு பத்திரிகை உலகில் முக்கியமானவர்களை ஏற்கனவே தொடர்பு கொண்ட போதே அவர்கள் தயக்கத்தைப் புரிந்துகொண்டோம். பணம் முதலீடு நான் செய்யும் பட்சத்தில் அவர்கள் பதிப்பித்துத் தருவதாகச் சொன்னார்கள். அப்படித்தான் எல்லா எழுத்தாளர்களும் செய்கிறார்கள். அத்துடன் விநியோகத்தையும் விற்பனையும் நாம்தான் செய்து கொள்ளவேண்டும்.

எழுதுவதே எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் செய்தோம். தமிழிலே எனக்கு இந்தப் புத்தகம் முடிப்பதற்கு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் பிடித்தன. ஆராய்ச்சிக்காக நான் சென்ற இடங்கள் எத்தனையோ.. விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் பேருந்திலும் டிரெயினிலும் திடீர் திடீரென ஓடியிருக்கிறேன். வடக்கே ஸ்ரீகாகுளம் பகுதியில் வம்சதாரா நதியோரம் சென்றுவந்தால் தெற்கே கோதாவரி நதிக்கரையோரம் சைக்கிளில் கூட சென்றிருக்கிறேன். எத்தனையோ கல்வெட்டுகள், புத்தகங்கள் விவரங்கள் எத்தனையோ சான்றோர்களுடன் கலந்துரையாடல்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவனின் திருவருள் கிடைத்ததால் வம்சதாரா வெளிப்பட்டாள். தமிழ்நாட்டில் நர்மதா பதிப்பகம் என்னை ஆதரித்தது. தமிழ் வாசகர்கள் மத்தியில் இந்தப் புத்தகத்தை நேர்த்தியாக எடுத்துச் சென்றார்கள். ஆனால் தெலுங்கில் நிலைமையே வேறு, புத்தகத்தை நாமே நம் செலவில் பதிப்பித்து அதை வாசகர்களிடம் கொண்டு சென்று விற்கவேண்டிய கட்டாய நிலை உருவானது.

ஆனால் இறைவன் அருளால் வம்சதாராவுக்கு நல்ல காலம் வந்தது. சென்னை பழனியப்பா பிரதர்ஸ் திரு செல்லப்பன் அவர்கள் வம்சதாரா தெலுங்குப் புத்தகத்தைப் பதிப்பிக்க முன்வந்தார். ஆனால் இந்தப் புத்தகம் தெலுங்கு மொழி என்பதால் அனைத்துப் பொறுப்புகளையும் என்னிடமே விட்டுவிட்டார். புத்தக உருவாக்கத்தின் பிரதியைக் கொடுத்தால் அப்படியே ஒன்றும் மாற்றாமல் பதிப்பித்துத் தருவதாகச் சொன்னார். தவறு ஏதேனும் வந்தால் என் பொறுப்பு என்றும் சொல்லியதால் இந்தப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.பிழை திருத்தல் முடிந்ததும்  ஏறத்தாழ நான்கு மாதங்கள், இந்த உருவாக்கத்தில் கழிந்தன. பிறகுதான் புத்தகம் வெளிவந்தது.

பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்துக்கு வம்சதாரா முதல் தெலுங்குப் புத்தகம் என்கிற பெருமை ஏற்படுகின்ற அதே சமயத்தில், தெலுங்கு இலக்கிய உலகில் முதன் முதலாக தங்களது சொந்தப் பிரதேசத்தில், அதுவும் வட ஆந்திரப் பகுதியில் நிகழ்ந்த பழங்கால நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டதால், தெலுங்கு மொழியில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட சரித்திர நாவல் என்கிற பெருமையும் பெறுகிறது.

மறுபடியும் ஸஹ்ருதய ஸாஹிதி இந்த முறை பெரிய அளவில் வம்சதாராவை அறிமுகப்படுத்த முன்வந்தார்கள். விழாவையும் முன்னின்று நடத்தினார்கள். டாக்டர் வேணு புத்தகத்தை இந்த முறையும் சிறப்பித்துப் பேசினார். தெலுங்கு சான்றோர்கள் பலர் வந்திருந்து வாழ்த்தினார்கள். தங்கள் பகுதியின் பழங்காலம் சிறப்பிக்கப்பட்டு எழுதியிருப்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட அளவில்லா மகிழ்ச்சி அவர்கள் வருகை மூலமாக வெளிப்பட்டது.

அருமை நண்பர் திரு பாலாஜி (ஸ்ரீராம் ப்ராபர்டீஸ், விசாகப்பட்டினம்), பெரிய அளவில் வம்சதாராவை பலரும் படிக்க ஏதுவாக உதவி செய்ய முன்வந்தது மறக்க முடியாதது.

ஆக வம்சதாரா மிகப் பலமாக தன் காலை ஊன்றி சொந்த ஊர் சென்றது மனதுக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. அடுத்து விஜயவாடாவிலிருந்து அழைப்பு வந்துள்ளது. கலைகளையும் இலக்கியங்களையும் ஆதிகாலம் தொட்டு ஆதரித்து வரும் ஆந்திரத் தலைநகரில் கூடிய விரைவில் வம்சதாரா அடியெடுத்து வைக்க இருக்கிறாள்.


இந்தச் சமயத்தில் என்னுடைய நன்றிகளை ஸஹ்ருதய ஸாஹிதி தலைவர் திருவாளர் சேகரமந்த்ரி பிரபாகர், திரு வேணு, திரு எல்.ஆர் சுவாமி, திரு பாலமோகன் தாஸ் ஆகியோருக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். டாக்டர் வேணு இந்தப் புத்தகம் எப்படியும் வெளியிடப்படவேண்டும் என்று உறுதியாக நின்றிருந்தால்தான் வம்சதாராவுக்கு வழி பிறந்தது. அதே சமயத்தில் திரு பிரபாகரின் உதவி மிகப் பெரியது. அன்பின் வலிமையை அவர் மூலம் தெரிந்து கொண்டேன். கனகமகாலக்ஷ்மியின் கருணைதான் என்று சொல்லவேண்டும்.

தெலுங்கு இலக்கிய உலகின் முதல் சரித்திரக் கதையாக வலம் வரும் வம்சதாரா தெலுங்கு பேசும் அனைவர் இல்லத்திலும் கால் பதிய வேண்டும் என்பது என் அவா.

                        *****************

* மேலே படத்தில் - டாக்டர் வேணு, பேராசிரியர் பாலமோகன் தாஸ் (மேனாள் துணைவேந்தர், நாகார்ஜுனா பல்கலைக்கழகம், திரு ராஜேந்திரன் (தலைவர்,வம்சதாரா பேப்பர் ஆலை, ஸ்ரீகாகுளம், பேராசிரியர் வேதுல ஸுப்ரமணியம் மேநாள் தெலுங்குப் பிரிவு தலைவர், ஆந்திர பல்கலைக்கழகம், திரு சேகரமந்த்ரி பிரபாகரம் தலைவர், ஸஹ்ருதய ஸாஹிதி, பேராசிரியர் ராகவேந்திரன், பீமிலி ஆஸ்ரமம். (மேடையை அலங்கரித்த சான்றோர்கள்)


Wednesday, March 16, 2016

விசாகப்பட்டினம் - மாற்றமும் ஏமாற்றமும்

 
’என்ன உறவோ என்ன பிரிவோ’ என்ற கவிஞர் வாலியின் கவிதைத்தனமான கேள்விதான் எனக்குள் இப்போதும் ஒலிக்கிறது.


பிரிந்தும் பிரியாத நிலையில் விசாகப்பட்டினத்தை விட்டு வந்திருக்கும் நான் சிறிது இடைவெளிவிட்டு அந்த அழகிய நகருக்குச் செல்லும் வாய்ப்பு மறுபடி வந்தபோது அழகாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினாலும் இந்த உறவும் பிரிவும் பாதிக்காத வேறு ஒரு மனநிலையை அனுபவித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

பட்டினம் என்று தமிழிலே பழஞ்சொல்லொன்று உண்டு. கடல் சார்ந்து மக்கள் புழங்கும் இடங்களைப் பட்டினம் என்பார்கள். சேரநாட்டுக் கரையிலிருந்து ஒரிய நாட்டுக் கரை முழுவதும் இப்படி ஏராளமான பட்டினங்களை இப்போதும் பார்க்கலாம். அதுவும் ஆந்திரக் கடலோரப் பட்டினங்கள் ஏராளமாக உள்ளன. ஆந்திரத் துறைமுகங்களான வடக்கே கலிங்கப்பட்டினம் முதல் தெற்கே நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணப்பட்டினம் வரை நம் செந்தமிழ்ப் பெயர் பரவித்தான் உள்ளது.

துறைமுக நகரமான விசாகப்பட்டினம் என்ற பெயர் கூட இந்த இடத்துக்குப் பின்னர் வந்ததுதான். தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலிங்கப் போரில் வெற்றி வாகை சூடிய சோழர்கள் படைத்தலைவன் (கருணாகரத் தொண்டைமான்) இந்த ஊரின் பெயரை தங்கள் அரசன் குலோத்துங்கன் பெயரில் குலோத்துங்க சோழப்பட்டினம் என்று பெயர் சூட்டினான். இதற்கான 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டொன்று தமிழில் எழுதப்பட்டு இன்னமும் கிழக்குப் பிராந்திய கடற்படைப்படை தலைமை அலுவலக அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு நம் முருகருக்காக ஒரு கோயிலும் தமிழர்களால் எழுப்பப்பட்டு விசாகேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்ததாகச் சொல்வர். இந்தக் கோயில் பின்னாட்களில் கடல் சீற்றத்தில் சிதைவடைந்ததோ அல்லது கடலால் உள்வாங்கப்பட்டுப் பாழானதோ தெரியவில்லை. ஆனால் விசாகேஸ்வரர் இந்த நகருக்கு அழகான பெயரை மட்டும் தந்துவிட்டுதான் மறைந்து போயிருக்கிறார்.

விசாகப்பட்டின சரித்திரமே தனி. இந்த மண்ணுக்கென மைந்தர் யாருமே இல்லை இங்கே. இருப்பவரில் ஏராளமானோர் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் அண்டை மாநிலங்கள் அல்லது வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சென்னை போன்ற பெரு நகரங்களோடு ஒப்பிடும்போது நகரம் மிகச் சிறியதுதான். ஒரு மணி நேர காலகட்டத்தில் நகரின் நாலாபுறத்தையும் மிதித்து வரலாம்தான்.

என் இலக்கிய வாழ்க்கை இங்குதான் பலப்பட்டது. இந்த நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் மையமாகக் கொண்டுதாம் என்னுடைய முதல் நாவல் வம்சதாரா எழுதப்பட்டது. என்னுடைய எல்லா இலக்கிய படைப்புகளுக்கும் இந்த நகரத்தில்தான் விழா எடுத்து நண்பர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தெலுங்கு இலக்கிய உலகமும் என்னை அவ்வப்போது அழைத்து கௌரவப்படுத்திய நகரம்தான். என் இஷ்டதெய்வம் கனகமகாலக்ஷ்மி இங்கு கோயில் கொண்டதோடு என் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட இடம் இது. எத்தனையோ தமிழ் நாடகங்களை நான் இங்கு மேடையேற்றியுள்ளேன். அஜாத சத்ருவாய் நான் வலம் வரும் இடம் கூட.

பல வருடங்களாகவே இந்த நகரத்தைக் கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். மூன்று பக்கங்களிலும் மலையும் நாலாவதாக கடலையும் எல்லையாகக் கொண்டு தன்னைத் தானே எப்படியோ எங்கேயோ நுழைத்து நீட்டிப் பெருக்கிக் கொண்டு வளரும் விசித்திரமான நகரம் இது. பொதுவாக நகரத்துக்கென்றே உருவான நாகரீகம் இங்கும் உண்டு. காலத்தால் ஏற்படும் மாற்றங்கள் இந்த நகரத்தையும் ஏகத்துக்கு மாற்றிவிட்டதுதான்.. 

விலைவாசி அதிகம் உள்ள நகரத்தில் இதுவும் ஒன்று. விசாகப்பட்டினத்தைச் சுற்றிலும் விளையும் பயிர்வகைகள் மிக மிகக் குறைவு. சுற்றிலும் உள்ள மலைப் பிராந்தியங்கள் விளைநிலங்களைத் தந்ததில்லை. காய் கனி வகைகள் அனைத்தும் வெளியிடங்களிலிருந்து வந்தால்தான் நகரமக்கள் நன்றாக வாழமுடியும். இயற்கையாகவே மந்த கதியில் சூரியன் இந்த நகரை வைத்திருக்கிறானோ என்று கூட சில சமயங்களில் தோன்றும். கோடை மழைகள் அதிகம் என்றாலும் கூடவே நாள் முழுதும் வேர்த்து விறுவிறுக்கும் போது சற்று ஆயாசம் கூட வரும். வெய்யிலின் சூடு தகிக்கிறதா அல்லது கடல் இங்கே வெந்நீராக மாறி சித்ரவதை செய்கிறதா என்ற அளவில் கடற்கரையில் கூட சில்லென்ற காற்று நம்மை சில சமயங்களில் அண்ட விடாது செய்யவைக்கும் இயற்கையான தட்பவெப்பம். ஏற்கனவே அகலம் சிறிதான அளவில் இருக்கும் கடற்கரை மேலும் சுருங்குகிறதோ என்ற சந்தேகம் எப்போதும் மனதில் தோன்றும் அளவுக்கு கடலலைகள் கையில் கத்தியை வைத்துக்கொண்டு கரை மணலை அரித்துக் கொண்டே நகரத்துக்குள்ளே நுழைய ஆசைப்படும் காட்சியைப் பார்க்கும்போது நகரத்தின் எதிர்கால கடற்கரை எப்படி இருக்குமோ என்ற பயம் கூட மனதில் தோன்றும்தான்.  


முப்பதுவருடங்களுக்கு முன்பு வரை இருந்த கடற்கரையின் இயற்கையான அழகையெல்லாம் மனிதன் களவாடி சிதைத்து விட்டு பச்சைப் பசேல் என்ற பகுதியில் செயற்கை அழகைச் செதுக்கி வைத்து சீராட்டிப் பார்த்ததால் கடற்கரை சாலையின் விளிம்பு வரை வந்த சிமெண்ட் கட்டடங்கள் நமக்கு சற்று எரிச்சலைக் கூட தரலாம். சாலைகள் அழகாகத்தான் தெரிகின்றன. தலைவர்கள் வரும்போதெல்லாம் கூட மேடு பள்ளங்கள் சீரமைக்கப்படுவதால் எளிதில் கடக்கமுடியும்தான். ஆனால் துறைமுகத்தில் வந்திறங்கும் கரி மூலமாக வெளிப்படும் கரும்புகை நகரம் முழுவதும் ஏற்கனவே மூடுபனி போல படிந்து கிடக்கின்ற நிலையில் வாகனங்கள் மூலம் வெளிப்படும் புகையும் சேர்ந்து கொள்வதால் அந்த அழகான சாலைகளில் கூட முகத்தை மூடிக்கொண்டுதான் செல்லமுடிகின்ற நிலை. இத்தனைக்கும் இந்த நகரத்தில் மற்ற நகரங்களைப் போல மக்கள் பெருக்கம் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை.. சாதாரண அளவில் மட்டுமே மக்கள் தொகை பெருகுகிறது.
 கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தோமேயானால் முந்தைய பிளவுபடாத ஆந்திர மாநிலத்தின் தொழில் நகரம் என்ற பெயரை எப்போதோ விசாகப்பட்டினம் பெற்றிருந்தது வாஸ்தவம்தான். நகரத்தின் தெற்கே இந்தியாவிலேயே பெரிதான கப்பல் தொழிற்சாலையோடு (மேலே உள்ள படம்) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, உரம் தயாரிக்கும் ஆலை, இரும்பு உக்காலை, மிகப் பெரிய பாரத் ஹெவி ப்ளேட்ஸ் அண்ட் வெஸ்ஸெல்ஸ் ஆலை (பிஹெச்பிவி) என தொழில் சிறக்கும் ஆலைகள் நிறைந்த பிரதேசம் இந்த நகரம். இந்தத் தொழிற்சாலைகளினால் எத்தனையோ சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் வளர்ந்து கொண்டிருந்தன. 

ஆனால் தற்போதைய நிலையை நினைத்துப் பார்த்தால் நெஞ்சுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. மிகப் பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலையும், மிகப் பெரிய பிஹெச்பிவியும்  மிகவும் சீரழிந்த நிலையில் இருக்க புதிய தொழிற்சாலை ஏதுமே இந்த முப்பது ஆண்டுகால நகர வரலாற்றில் கொண்டு வரப்படவே இல்லை. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மந்த கதியில் இன்றைக்கு இயங்கும் நிலை கூட சீரணிக்க முடிவதில்லை. அன்றைக்கு மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத் நகருக்கு வெகு முக்கியமான நிலை கொடுக்கப்பட்டதால் தொழில் வெகு வேகமாக அங்கு வளர இங்கிருந்த இளைஞர்கள் வேலை தேடி ஏராளமான அளவில் தலைநகருக்குக் குடியேற ஆரம்பித்தனர். ஒரு தலைமுறை அங்கு சென்றால் அவ்வளவுதான். விசாகப்பட்டினம் நகரம் தொழில் ரீதியாக எந்த வளர்ச்சியுமில்லாமல் கிடக்க கரும்புச் சாறினை எதிர்பார்த்துப் பயணிக்கும் ஈக்களைப் போல வேறு பயன்கிடைக்கும் இடங்களுக்கு மக்கள் போவதை யாராலும் தடுக்கமுடியவில்லை.


இன்று மாநிலம் இரண்டாகிவிட்டது. புதிதாக பிரிந்த ஆந்திராவில் மிகப் பெரிய இடம், நகரம் இந்த விசாகப்பட்டினம்தான். ஒருகாலத்தில் ஹைதாராபாத் நகரத்தை எப்படியெல்லாம் பெரிதாக்க முயன்று எத்தனையோ தொழிற்சாலைகளை அங்கு நிறுவினார்களோ, அதே போல இன்று இங்கும் சாதிக்க முடியும். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த சாதனைக்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் கூட இதுவரை எடுக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நகரத்தின் எல்லைகளில் விரிந்து கிடக்கும் காலி இடங்களை இந்தச் சமயத்தில் காணும்போதெல்லாம் இங்கு ஒரு இன்ஃபோஸிஸ் வரலாமே, அல்லது டிஸியெஸ் வரலாமே என்று ஏங்கவைக்கிறதுதான். ஆனால் முதலில் காண்பிக்கப்பட்ட அந்த நம்பிக்கை இப்போது மறைந்து கொண்டே வருகிறது. இத்தனைக்கும் மிக நல்ல பொறியாளர்களை விசாகப்பட்டினக் கல்விக் கூடங்கள் தந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் இதே பெரிய கம்பெனிகள் இவர்கள் படிக்கும் கல்லூரிக்கே வந்து தங்கள் இருப்பிடங்களுக்குத் தூக்கிச் செல்கின்றனர்தாம். பல கல்லூரிகளில் நல்ல தரமான கல்வி கொடுக்கப்படுகிறது. ஆனாலும் கொடுக்கும் இடத்துக்கு இதனால் ஒரு பயனும் இல்லை என்பதுதான் வேதனை.

இந்த வேதனை தீரவேண்டும்.. நகரத்தின் பயனை உணர்ந்து பல பெரிய தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில் அமைக்க வரவேண்டும். மென்பொருள் நிறுவனங்கள் எந்த மூலதனமும் இல்லாமல் நிறுவுவதற்கு ஏதுவாக அரசாங்கம் வழி வகை செய்யவேண்டும். இப்படித்தான் ஹைதராபாதில் செய்தார்கள். பேசிக் கொண்டே காலம் கழிக்காமல் அரசாங்கம் செயல் ரீதியில் தங்கள் சாதனைகளை நடத்தி இந்த நகரத்தைக் காப்பாற்ற வேண்டும். கல்விக்கூடங்கள் பெருகுகின்றன.. உண்மைதான்.. ஆனால் கொண்ட ஊருக்கு உதவாத கல்விக்கூடங்களால் இந்த நகரத்துக்கு என்ன பயன் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். நகரத்தில் உறவு கொண்டு வாழும் இளைய தலைமுறைகள் இந்த நகரத்திலேயே தங்கள் கல்விக்கு ஏற்றவாறு வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையை வளரவிடவேண்டும். தங்கள் உறவுகளைப் பிரித்துக் கொண்டு அல்லது உறவை அப்படியே தூக்கிக் கொண்டோ வேறு இடத்துக்கு மாறாத சூழ்நிலை உருவாக வேண்டும். ஒரு காலத்தில் வந்தாரை வாழவைக்கும் நகரமாக விசாகப்பட்டினம் இருந்தது. இன்று அப்படி இல்லை.. உள்ளவர்களுக்கே உதவி செய்ய முடியாத நிலை. இந்த நிலை மாறவேண்டும். ஏமாற்றம் தீரவேண்டும்.

அதே சமயத்தில் இந்த நகரத்தில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குதான் ஒன்று தெரியும் இந்த நகரில் உள்ள அமைதியான சூழ்நிலை வேறெங்காவது கிடைக்குமா என்றால் இல்லை என்று நிச்சயமாக பதில் வரும். இங்கு நகரை ஆளும் அதிகாரிகள் கூட அரசியல் தலையீடு இல்லாமல் இயல்பாகவும் சுதந்திரமாகவும் பணி செய்யும் நிலை வேறெங்கும் கிடைக்காது என்பதை உணர்ந்துதான் இருப்பர். அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் கூட அன்போடு மக்களோடு மக்களாகப் பார்க்கப்படும் சூழல் இங்கு மட்டுமே கிடைக்கும். இந்த நகரத்தில் மட்டுமே காவல்துறை உண்மையாகவே மக்களின் தோழர்களாகத்தான் இருப்பர். இந்த நகரத்தில் குண்டர்குழாம் கிடையாது. கூலிப்படை கிடையாது. ஏனைய நகரங்களை விட இந்த நகரத்தில் பெண்களுக்கு சற்று பாதுகாப்பு அதிகம்தான். 

மொத்தத்தில் இந்த நகரத்தில் கிடைக்கும் நிம்மதி வேறெங்காவது கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான். மனித நேயத்தை இங்கு தாராளமாகக் காணலாம். அதனால்தானோ என்னவோ வயதான காலத்தில் ஓய்வுக் காலத்தைக் கழிக்க இங்கு நிறையபேர் வருகிறார்கள்.
ஆனால் ஓய்வுலக நகரம் என்ற பெயரை விசாகப்பட்டின நகரம் தத்தெடுத்தாலும், வந்தாரை, வருவோரை, மிக முக்கியமாக இருப்போரை வாழ வைக்கும் நகரமாக இருப்பதுதான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்லது. அப்படிப் பட்ட நிலையில் வைக்க விசாகப்பட்டினத்தில் தென்கடல் அருகே கோயில் கொண்டுள்ள கனகமகாலக்ஷ்மியும், வடகடற்கரையான பீமிலியில் கோயில் கொண்டுள்ள சிவானந்த மகாலக்ஷ்மியும் அருள் தந்து உதவவேண்டும். நகரத்து உறவுகள் பிரியாமல் இருக்க அவள்தான் அருள்புரிய வேண்டும்.

எனக்கும் விசாகப்பட்டினத்துக்கும் உள்ள உறவில் பிரிவு வராதுதான். ஆனாலும் இன்றைய விசாகப்பட்டின நிலை ’என்ன உறவோ என்ன பிரிவோ’ என்ற கேள்வியை என் மனதில் உண்டாக்கிவிட்டதுதானே..

(படங்கள் மேலே கைலாஷ்கிரி சிவசக்தி, கீழே கனகமகாலக்ஷ்மி)

Saturday, April 4, 2015

அமராவதி


’அமராவதி - அழகான பெயர்’.. இப்படித்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ’அம்பிகாபதி’ திரைப்படத்தில் தான் முதன்முதலாகப் பார்த்த கதாநாயகி பானுமதியைப் புகழ்ந்து தன் காதலை வெளிப்படுத்த முன்வருவார்.. இப்படி ஒரு அழகான பெயர் கொண்ட அமராவதி இனி ஆந்திராவின் தலைநகரத்தின் பெயராக மாறப்போகிறது.


எட்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய ‘விசித்திரசித்தன்’ கதைக்காக வேண்டி அமராவதிக்கு சென்றபோது அணு அணுவாக நான் ரசித்த ஊர். புதினத்தின் தோற்றமே இந்த அமராவதியில்தான் ஆரம்ப அத்தியாயம்.

ஆந்திரதேசத்தின் ஐந்து புகழ்பெற்ற பாஞ்சாராம சிவத்தலங்களில் ஐந்தாவது சிவத்தலம்தான் அமராவதி எனும் ஊர். ஸ்ரீதான்யகடகம் என வடதேசத்தவர்களால் முன்னர் அழைக்கப்பட்ட பழைய ஊர். ஞானமூர்த்தியான புத்ததேவர் தன் சிஷ்யர்கள், தொண்ணூற்றாறு அரசர்கள் புடை சூழ தன் மலர்ப்பாதங்களை வைத்த ஊர்.. காலச்சக்கரம் எனப் புகழ்பெற்ற வருங்கால கணிப்புகளை இந்த ஊரில்தான் தன் சீடர்களிடம் புத்தபிரான் உபதேசித்தாராம். சமீபத்தில்(2006 ஆம் ஆண்டு) இந்த காலச்சக்கர விழாவினை நினைவுபடுத்த உலகம் முழுதும் உள்ள புத்தபிக்குகளை தலாய்லாமா தலைமையில் ஒன்று கூட்டிய ஊர்.

’இந்த ஊரை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாக’ நினைத்துக் கொண்டு மாலையாக தன் மேல் சுற்றிக் கொண்டு கிருஷ்ணவேணி நதி ஆடி ஓடி வளைந்து வரும் ஊர். கிருஷ்ணையில் எப்போதும் எந்நாளும் தண்ணீர் நிரம்பி வழியுமென்று  சொல்லமுடியாவிட்டாலும் வருடத்தில் ஒன்பது மாதங்களாவது தண்ணீர் நிறைந்திருக்கும் என்பதாலும் ஒரு பக்கம் மலைச்சரிவும், ஒருபக்கம் பச்சைப்பசேல் என வயல்களும் இன்னொரு பக்கம் இந்த தண்ணீர் நிறைந்த கிருஷ்ணையின் அழகாலும் கணகளுக்கு விருந்தளிக்கும் இயற்கையழகு மிக்க ஊர்.. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கே நதித்துறைமுகத்தை அமைத்து கிருஷ்ணை நதி வழி மூலமாக உலகம் முழுவதற்குமான வாணிபம் செய்த ஊர்.

ஒரு காலத்தில் புத்தமதம் செழித்த ஊர் என்பதால் இன்னமும் கூட அதன் மிச்சங்களாக தூபிகளும் நினைவுச் சின்னங்களும் ஆங்காங்கே நிறைந்திருக்கும் ஊர். புத்தத்தோடு எப்போதும் கூடவே வந்து குடியேறும் சமணர்கள், வேதமதத்துப் பண்டிதர்கள் நிறைந்த ஊர். எல்லாச் சமயங்களும் புகழ்பெற்ற அந்தப் பழைய காலத்தில் நம் தமிழகத்து ஆறுமுகனும் வணங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்த ஊர். அமராவதி சிற்பங்கள் ஆந்திரத்தினரின் கலை ரசனையை உலகுக்குப் பறைசாற்றியவை.. சிற்பங்கள் நிறைந்த ஒரு அருங்காட்சியகமே இந்த ஊரில் உள்ளது.. எத்தனை பெருமைகள் இந்த ஊருக்குதான் என்று மூக்கில் விரல்வைக்கத் தோன்றுகின்றதல்லவா..

ஆமாம்.. ஊர் ஊர் என்கிறேனே என்று பார்க்கிறீர்களா? ஊர் என்றால் நம் பழந்தமிழ் வழக்கில் மக்கள் புழங்கும் சிறிய நிலப்பகுதியைத்தான் சொல்வார்கள். ஆமாம்.. இன்று வரை இந்த அமராவதி மிகச் சிறிய ஊர்தான். ஆனால் இனியும் அப்படி இல்லை. எப்போது ஆந்திர அரசாங்கம் விஜயவாடவின் மேற்கே, கிருஷ்ணை நதியின் தென்கரையில் இருக்கும் துள்ளூர் கிராமப் பகுதியைத் தம் தலைநகரத்துக்காக தேர்ந்தெடுத்ததோ அப்போதே அருகே இருக்கும் அமராவதி தன் அமைதியான சூழ்நிலையை கொஞ்சம் இழக்க ஆரம்பித்ததுதான். 

ஆந்திர அரசாங்கத்தின் புதிய தலைநகருக்கான திட்டங்களைக் கேட்டால் ‘அடேயப்பா’ என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. சிங்கப்பூர்க்காரர்களால் கட்டடங்கள் கட்டப்பட மலேஷியாக் காண்ட்ராக்டர்களால் சாலை வசதி செய்யப்படுமாம். ஆறு வழிச்சாலைகள், கிருஷ்ணையைக் கடக்க ஆங்காங்கே ஆறு பாலங்கள், விமானநிலையம் (கன்னாவரம் விமான நிலையம் இங்கிருந்து 40 கி.மீட்டர்கள்), விஜயவாடா ரயில்வே நிலையம் (20 கி.மீ) மச்சிலிப்பட்டணம் துறைமுகத்துக்கு (80 கி.மீ) உடனடி தொடர்பாக விரைவு வழிச் சாலைகள், வானுயர அடுக்குமாடி குடியிருப்புகள், ஆளுநர், அசெம்பிளி, அரசுக் காரியாலயங்களுக்கென தனித்தனியாக மாட மாளிகைகள் என தற்சமயம் கட்டட வரைபடம் வெளியாகியுள்ளது. இத்தனை விஷயத்திலும் வாஸ்து’ முறை பார்த்து அனுசரிக்கப்படுமாம். இதற்கான முதற்கட்ட தவணைப் பணமாக மத்திய அரசு ரூ 1500 கோடியை சமீபத்தில்தான் கொடுத்திருக்கிறது. மொத்தம் 40,000 கோடி ரூபாய் ஆகும் என்கிறார்கள். நாலே வருடம் என்கிறார்கள்.
ஆச்சரியமாக வாயைப் பிளக்க வைக்கிறது.. இந்த திட்டங்கள் எல்லாம் நிறைவேறினால் அமராவதி நிஜமாகவே அந்த இந்திரலோகத்து அமராவதியாகத் தென்படுமா என்ற ஆசையும் கூடவே எழுகிறது. இப்படி ஒரு தலைநகரை உருவாக்க உதவி புரிய தெலுங்கானா பிரிவினையைக் கூட பாராட்டத்தான் தோன்றுகிறது..

அதே சமயத்தில் இன்னொரு கேள்வியும் தொக்கிக் கொண்டே இருக்கிறது. பழைய நினைவாக தமிழகத்திலிருந்து பிரிந்து போன ஆந்திரம் கண் முன்னே வலம் வருகிறது. இத்தனை அழகான தலைநகரமாக அமராவதி திகழக்கூடும் என்கிற எண்ணம் ஏன் அந்தக் கால ஆந்திரப் பிரிவினைவாதிகளிடம் எழவில்லை.. மதராஸ் மனதே என்று கோஷம் போட்டு நல்ல உயிர் ஒன்றையும் தியாகம் செய்து, அந்த தியாகம் வீணாகப் போக, கர்நூல் நகரைத் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து அதுவும் சரிவர முடியாமல் போகப் போயும் போயும் ஹைதராபாதின் துணையை ஏன் பெறவேண்டும். அந்தச் சமயத்தில் தங்களுக்குத் துளியும் ஒத்து வராத கலாச்சாரத்தை கொண்ட நகரம் அது என்றாலும் தெரிந்து தெரிந்து ஹைதராபாத்தை ஏன் அத்தனை பெரிதாக உருவாக்கவேண்டும், பேசாமல் அன்றே, அந்த அறுபது வருடங்களுக்கு முன்பே இந்த அமராவதியை உருவாக்கியிருந்தால் இன்று இத்தனைக் கஷ்டப்படாமல் அமராவதி எனும் அழகான மத்திய இடத்தில் இருந்து கொண்டு அமைதியாக ஆட்சி செய்திருக்கலாமே, பிரிவினை வந்திருந்தாலும் கூட..


போகட்டும், பெட்டர் லேட் தன் நெவர்.. இப்போதாவது கடைசியில் இப்படி செய்கிறார்களே என்று மகிழ்வோமாக. புதிய தலைநகரத்தை வாழ்த்துவோமாக.. வருங்கால சந்ததியினர் இவர்களை வாழ்த்தும் வகை செய்வார்களாக.. ஆந்திரா புதிதாக ஒரு சரித்திரம் படைக்கட்டுமே.. 



படங்கள் உதவி: கூகிளாண்டவர்.
1. தலைநகர வரைபடம்
2, அமரேஸ்வரர் கோயில்
3. கிருஷ்ணவேணி நதி
4. பௌத்த பிக்குகள் அமராவதியில் கூடிய போது
5. புத்தர் அமராவதி வந்ததற்கான நினைவுச்சின்னம் - சாதவாகன அரசர்கள் எழுப்பியது.

Saturday, November 29, 2014

குலோத்துங்கனும் நானும்

 சென்ற ஞாயிறன்று மாலை விசாகையில் அடியேன் எழுதிய அம்ருதா நாவலை நண்பர்கள் முன்னின்று வெளியீடு செய்தார்கள். 'காலத்தால் செய்த உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது’ என்பது திருவள்ளுவர் குறள் சொல்வது. . என் விசாகப்பட்டினம் நண்பர்கள் இக்குறளோடு இணைவது மட்டுமல்லாமல் அதற்கும் மேலே ஒரு படி ஏறிச் சென்று எனக்கு ஊக்கம் அளிப்பவர்கள். அதனால்தான் விழாவில் கூட இந்தக் குறளோடு என் ஏற்புரையை அங்கு ஆரம்பித்தேன்.

என்னுடைய எட்டாவது புத்தகமும், ஐந்தாவது சரித்திர நவீனமான ‘அம்ருதா’ என் கைக்குக் கிடைத்த  இரண்டாவது நாளே கடகடவென அதி வேகமாக அம்ருதாவின் விடுதலையையும் தீர்மானித்து நடத்தியும் காட்டி விட்டார்கள்.. இது ஒவ்வொரு முறை என்னுடைய புத்தகம் வெளிவரும்போதெல்லாம் நடைபெறும், செயல்தான். 2004 ஆம் ஆண்டில் வம்சதாரா வந்த புதிதில் நண்பர்களிடத்தே இருந்த அந்த வேகம் பத்து வருடம் கடந்தாலும் இன்னமும் குறையவில்லை என்பதை நினைத்துப் பார்க்கும்போதே என் மனதில் அவர்களது அன்பு கடந்த உணர்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இது காலத்தால் செய்த உதவியையும் விட மேலானது அன்றோ..
விழாவில் அம்ருதா நவீனம் குலோத்துங்க சோழனைப் பற்றிய கதை என்றதும் என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்.. ‘நானும் பார்க்கிறேன்.. உங்கள் கதைகளில் எப்படியாவது குலோத்துங்கனைக் கொண்டு வந்துவிடுகிறீர்கள்.. குலோத்துங்கன் உங்களை மிகவும் பாதித்திருக்கிறான்'’ என்று ஆச்சரியமாகச் சொன்னார். ’இதில் ஒன்றும் ஆச்சரியமே இல்லை.. விசாகப்பட்டினத்துக்குப் பழைய காலப் பெயரே’ ‘குலோத்துங்க சோழப் பட்டினம்’ தான்.. அந்தப் பட்டினத்திலிருந்து கதை எழுதினால் குலோத்துங்கன் வரத்தான் செய்வான்’ என்று மேம்போக்காக பதில் கூறினாலும் அவரைக் கதையைப் படித்து விட்டு இந்தக் கேள்வியைக் கேட்கச் சொன்னேன். அம்ருதா நாவலை அறிமுகப்படுத்தியபோது சிறப்புத் தலைவர் திரு ராஜேந்திரன் (சுங்க ஆணையர், திருக்குறள் உலகம் முழுதும் பரவுவதற்கு வழிவகை செய்து வருபவர்) அடியேனைப் பற்றிப் பேசும்போது முந்தைய ஜென்மத்தில் குலோத்துங்கன் அவையில் இருந்திருப்பாரோ என்னவோ என்று சந்தேகம் கூட எழுப்பினார். குலோத்துங்கனுக்கு இரண்டு பெயர்கள் உண்டு. அவன் பிறக்கும்போதே அவனுக்கு ராஜேந்திரன் என்று பெயர் வைத்தனர். பின்னாளில் அரசாண்டபோது வணிகர்களுக்கு சாதகமாக சுங்கவரியைத் தவிர்த்து, ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற பெயரையும் பெற்றவன். ஆகையினால் இந்த சுங்கம் தவிர்த்த சோழனின் கதை சொல்லும் நூலை விடுதலை செய்ய சுங்கவரி ஆணையர் திரு ராஜேந்திரன் வந்திருந்தது கூட தற்செயலான செயலாக எனக்குத் தோன்றவில்லை.

ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கையில் ஏதோ ஒரு வகையில் இந்த சுங்கம் தவிர்த்த ராஜேந்திரனான குலோத்துங்க சோழன் என்ற மகாமன்னன் வரலாறு என்னைப் பாதித்திருக்கவேண்டும்தான்’ என்றே தோன்றுகிறது. நான்கு வருடங்கள் வம்சதாரா நாவலுக்கும், ஒரு வருடம் திருமலைத் திருடன் நாவலுக்கும், ஏறத்தாழ இன்னொரு நான்கு வருடங்கள் அம்ருதா நாவலுக்கும் நாட்களை செலவழித்தபோது, அந்த ஒன்பது வருடங்களில் எழுதப்பட்ட இந்த மூன்று கதைகளிலும் அடித்தளமாக விளங்கிய குலோத்துங்கனை எப்படி அவ்வளவு சுளுவாக என் மனம் தன் பளுவிலிருந்து தள்ளிவிடும் என்றுதான் தோன்றியது.

குலோத்துங்கனை தெலுங்கு ராஜாவாக அம்ருதாவில் ஒரு பேச்சுக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவன் முழுக்க முழுக்க தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். தமிழில் அவனை ஒரு பெரும்புலவனாக கலிங்கத்துப் பரணி எழுதிய ஜெயங்கொண்டார் வர்ணிக்கிறார். அவன் காலத்தின் சரித்திரக் கல்வெட்டுகளை மிகவும் கூர்ந்து நோக்கினால் எல்லாமே தமிழும் வடமொழியுமே தவிர ஒரு சில கல்வெட்டுகள் மட்டுமே தெலுங்கு மொழியில் அதுவும் அவன் சார்ந்த தெலுங்கு குட்டி ராஜாக்கள் தங்களோடு அவன் பெயரையும் சேர்த்துக்கொண்டு உயர்த்திக் கொண்ட செய்திகளை மட்டுமே சொல்வதாகும். அதுவும் அந்தக் கல்வெட்டுகள் தெலுங்கு மொழி பேசும் இடங்களில் மட்டுமே கிடைத்திருக்கின்றன. (அப்படிக் கிடைத்த சில தெலுங்கு கல்வெட்டுகள் கூட இக்கதைக்கு உதவி புரிந்தது இன்னொரு விஷயம்) ஆனால் அவன் தமிழில் எடுப்பித்த கல்வெட்டுகள் ஏராளம்.. ஏராளம்.
அம்ருதா கதையில் குலோத்துங்கன் ஆட்சிபீடம் ஏறியது பற்றிய விளக்கம் தந்திருக்கிறேன். இந்த விளக்கம் எப்படி ஒரு சரித்திர பூர்வ ஆதாரமாகும் என வாசகர்கள் கேட்கலாம்தான். நேரடியாக நாம் பார்த்திராத, நேரடியாக தெரிவித்திராத விஷயத்தினை ஒரு சரித்திரக் கதை மூலம் தெளிவாக்கி, அதை ருசுப்படுத்தி விடலாமா எனக் கேட்கலாம்தான். இதற்கு நாயகனான குலோத்துங்கன் காலத்தை நாம் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நான் இந்த கதைஉக்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளை எடுத்துக் கொண்டாலும் கூட பொதுவாக கல்வெட்டுகள் மூலம் தரப்படும் செய்திகளை விட குலோத்துங்கனைப் பற்றிய கோர்வையான விவரங்களை நமக்கு அள்ளித் தருபவர் அந்த சோழராஜாவின் அரசவைப் புலவராக இருந்த கவிப்பேரரசர் ஜெயங்கொண்டார்தான். அவர் எழுதிய கலிங்கத்துப் பரணியை இன்னமும் கூட சில சரித்திர ஆய்வாளர்கள் ஒரு இலக்கிய நூலாக மட்டுமே மதிக்கிறார்களே தவிர, அந்தக் காவியத்தில் கிடைக்கும் இடைப்பட்ட தரமான செய்திகளை ருசுவாக அதிகமாக எடுத்துக் கொள்ளவில்லை.. எத்தனையோ செய்திகள் எல்லாமே சரித்திர காலத்து புள்ளி விவரங்கள் போல தெளிவானவை.. ஆனாலும் நான் படித்த சரித்திரப்புத்தகங்களிலே (நீலகண்ட சாஸ்திரியார், டி.என். சுப்பிரமணியம், வெங்கடராமையா தவிர்த்து) கலிங்கத்துப் பரணியில் விரவிக் கிடக்கும் செய்திகளை இவர்கள் சீண்டவில்லை..  ஏன் இந்த போக்கு இவர்களிடம் என்பதும் புரியவில்லை.. பழைய காலத்தில் ஒரு செய்தி நடந்தது என்றால் அது நிச்சயம் கல்வெட்டு மூலமாக மட்டுமே கிடைக்கும் என்று இவர்கள் மனதில் மாற்ற முடியாத எண்ணம் பதிந்திருக்கலாமோ என்னவோ.. எதேச்சதிகார மனப்பான்மை கொண்ட அரசர்களின் ஆட்சியில் கல்வெட்டுச் செய்திகள் முழுமையான ஆதாரங்கொண்ட செய்தியாக எப்படி இருக்கமுடியும் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்களோ

கலிங்கத்துப் பரணியின் நாயகனே குலோத்துங்கன்தான். அவன் ஆட்சியைப் பிடித்த காலத்தைப் பற்றிய ஒரு தகவல் ஜெயங்கொண்டார் மூலமாக வருகின்றது.

மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்கம் ஓய்ந்தே.          27

சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்து போயே.     28

ஒருவரை யொருவர் கைம்மிக் கும்பர்தங் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே.       29

கலியிருள் பரந்த காலைக் கலியிருள் கரக்கத் தோன்றும்
ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி.    30

காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனாக் கொண்டு
கோப்பெலாங் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே.  31

வேதம் ஓதியோர் வேதமரபை மறந்தனர். நீதி குலைந்தது, நேர்மை அழிந்தது, ஒழுக்கம் மறைந்தது, எங்கெங்கு நோக்கினும் அடிதடி, கொலை, கொள்ளை, ஆட்சியாளர் தர்மம் மறந்தனர், ஆலயங்கள் சோம்பிக்கிடந்தன. தேவதைகள் வலுவிழந்து நின்றன. மங்கையரின் கற்பு சீர்கெட்டது. சாதிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு அழிவைப் பெரிதாக்கியது. எங்கும் காரிருளான வாழ்க்கை.

அந்தக் காரிருளான வாழ்க்கையில் ஒளிபுகுத்த வந்தவன் குலோத்துங்க சோழன்.. என்பதாக கலிங்கத்துப் பரணி குலோத்துங்கன் சோழ ஆட்சியைக் கைக்கொண்ட சமயத்தில் சோழ தேசத்தில் இருந்த நிலைமையைச் சொல்கிறது.

இப்படிப்பட்ட சீர்குலைந்த தேசத்தை நம் கற்பனையில் ஒரு கணம் கொண்டு வாருங்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இந்த சீர்கெட்ட காலத்துக்கு சற்று முன்னர்தாம் ராஜராஜ சோழன் ஒரு மிகச் சிறந்த அரசாட்சியையும், அவன் மகன் ராஜேந்திரனோ தந்தையை விட சிறந்த அரசனாகவும் விளங்கினான் என்று சரித்திரத்தில் பரவலாக படித்திருக்கிறோம். தர்மத்தின் ஆட்சி மிகப் பரவலாக நடந்த காலம் அது. சமுதாயத்தில் பல சீர்கேடுகள் அழிக்கப்பட்டு அரசியலில் குடவோலை மூலம் ஊராட்சியை சாதாரண மக்களே செய்ய வழிவகை செய்யப்பட்ட காலங்கள் அது, மிகப் பெரிய கோயில்கள், மிகப் பெரிய ஏரிகள் கட்டப்பட்ட காலம் அது. எங்கும் வேதகோஷங்களோடு தெய்வத்திருமுறை தமிழொலியும் சேர தெய்வங்கெளெல்லாம் ஒரு சேர நின்று வாழ்த்திய காலகட்டம் கூட அதுதான். ராஜேந்திரனின் மகன்கள் கடைக் காலத்தில் மிகச் சிறந்த சோழ தேசம் ஏன் இப்படி சீர்கெட்டுப் போகவேண்டும்? வேதம் ஓதிய காலம் அத்தனை அதி சீக்கிரத்தில் சாத்தானின் கைக்குள் ஏன் சிக்கவேண்டும்? சாதிச்சண்டை என்பது நம் பாரததேசத்தில் சகஜமான ஒன்றுதான்.. ஆனால் நல்ல ஆட்சியாளர்கள் அந்த சாதிப் பிரிவினையை காணாமல் போகடித்தது வாஸ்தவமே.. அப்படி இருக்கும்போது ஏன் நல்ல ஆட்சியாளர்கள் திடீரென மாயமாக வேண்டும்?

இத்தகைய அவலங்களை நாம் ஏதோ கற்பனையில் காணவில்லை.. அழகான கவிதைப் பாடலாக கலிங்கத்துப் பரணியே சொல்கின்றது என்றால் அந்தக் குறிப்பிட்ட காலங்கள் எப்படியெல்லாம் சீரழிந்து கிடந்தனவோ.. அந்த காரிருள் படிந்த நாட்களில் கொள்ளையர் கும்பலாக மக்கள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த குலோத்துங்கன் ஆட்சியைப் பிடித்து அரசனாகிறான், அடுத்த ஒரு ஐம்பது ஆண்டுகள் அவன் ஆட்சி நீடிக்கிறது. அமைதி எங்கும் நிரவி தர்மம் தலையெடுத்துத் தழைத்தோங்குகிறது, கோயில்கள் சிறக்கின்றன, சாதிப் பிரிவினைகள் மட்டுப்படுத்தப்பட்டு எதிரிகளைக் கட்டுப்படுத்தி ஒரு பேரரசனாக உருவாகுகிறான் என்றால் இந்த அரசன் எப்படிப்பட்டவனாக இருந்திருக்கவேண்டும்.. தேசத்தின் காரிருளைப் போக்கி ஒளியைப் புகுத்திய ஒரு மாபெரும் தலைவனாக வந்திருக்கிறான் என்றால் அவன் சக்தியும், குணமும் எத்தகையதாக இருந்திருக்கவேண்டும்.. அதர்மத்தை அழித்து தர்மம் காத்திருக்கிறான் என்றால் அவன் ஆளும் திறமையும், நேர்மையும் எந்த அளவில் இருந்திருக்கமுடியும்,..

இந்தக் கேள்விகள்தான் அம்ருதாவின் கதைக்கு ஆதாரம். இந்தக் கேள்விகள்தான் என்னுடைய மூன்று நாவல்களிலும் அடிப்படையாக நிரவிக்கிடந்து பதிலாக வருகின்றது. இந்த மூன்று நாவல்களில் குலோத்துங்கன் பற்றி அதிகம் பேசப்படுவது அம்ருதா’வில் மட்டுமே..

விசாகப்பட்டினத்துக்கும் குலோத்துங்கனுக்கும் தொடர்பு உண்டுதான். கலிங்கத்துப் போர் நடந்து முடிந்ததும், அவன் பெயரை இந்த ஊருக்கு வைத்துவிட்டுப் போன செய்தியை இங்கு அறிஞர்கள் சொல்லி வருகின்றார்கள். சோழர்கள் எங்கு சென்றாலும் ஊர்ப் பெயரை மாற்றி விடுவது பொதுவான வழக்கம்தான். இங்கு கோதாவரி வடகரை புண்ணிய தலமான திராட்சாராமம் என்னும் அழகிய ஊர், குலோத்துங்கன் காலத்தில் ’இடர்க்கரம்பை’ என்னும் அழகிய தமிழ்ப்பெயரில் வழங்கி வந்தது. விஜயவாடாவையே பெயர் மாற்றி ராஜேந்திரசோழபுரம் என்று அப்போது மாற்றி இருந்தனர்.  சட்டிஸ்கரில் உள்ள இன்றைய பஸ்தார் நகரம் சோழர்கள் காலத்திலே ‘சக்கரகோட்டம்’ என்ற தமிழ்பெயராக பேசப்பட்டது. ஆகையினால் குலோத்துங்க சோழபட்டினம் என்று இந்த இந்த கடற்கரை ஊருக்கு சோழர்கள் பெயர் வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான்.

ஆனால் எங்கேயோ சோழ தேசத்து ஆளுகையில் இருந்து கொண்டு இத்தனை தூரம் வந்து புகழ்பெறச் செய்த குலோத்துங்கன் எனும் அந்தப் பெயருக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கவேண்டும்தான். அந்த சக்திதான் என்னுள் வந்து இந்த அம்ருதா கதையை எழுதவைத்ததோ என்னவோ...
ஏறத்தாழ 950 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதைதான் என்றாலும் குலோத்துங்கன் என்ற அரசன் பெயர் இத்தனை காலத்துக்குப் பிறகும் இன்றும் பேசப்படுகின்றது, இன்னமும் வரும் காலங்களிலும் பேசப்படும் என்பதில் குலோத்துங்கனுக்கு மட்டுமா பெருமை.. அந்த குலோத்துங்கன் நடந்து சென்ற தேசத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் பெருமைதானே..

எதற்கும் ஒருமுறை அம்ருதாவைப் படித்து விடுங்கள்.. நீங்களும் அவன் பெருமை பேசலாமே என்று கூட தோன்றலாம்.. 














( மேலே படத்தில் முதல் நூலைப் பெற்ற டாக்டர் சுகந்தி, சுங்கம் ஆணையர் திரு ராஜேந்திரன், மற்றும் தமிழ்க்கலைமன்ற செயலர் திரு பெருமாள்)

Friday, October 24, 2014

அடுத்த வீட்டில் ஏற்பட்ட அலங்கோலம்


சென்ற பதினொன்றாம் தேதி சனிக்கிழமையன்று மாலை சென்று போன மின்சாரம் சரியாக எட்டுநாள் கழித்து இதோ மீண்டும் எட்டிப்பார்த்து எங்களை அடையாளம் கண்டுகொண்டு சரியான இடத்தில்தான் வந்துசேர்ந்தோம் என்று வந்துவிட்டதைப் பற்றியும் அதற்கு மூலகாரணமான அதி பயங்கர ஹூட் ஹூட் புயலையும் பற்றி எழுத வேண்டுமென்றிருந்தேன். 

மூன்று நான்கு நாட்களாகவே ‘அட்வான்ஸ் இன்ஃபார்மேஷன்’ கொடுத்து வருவேன் வருவேன் என்று சாதாரணமாக பயமுறுத்திக்கொண்டே திடீரென பயங்கரமான உருவெடுத்து ஒரேயடியாக நகரத்தை அழித்திடுவேன் என்று தனக்குப்பிடித்த வரையில், தன்னால் முடிந்தவரை அழிக்க வந்து போன அந்த ஹுட்ஹூட் புயலைப் பற்றி எழுதாமல் எப்படி விட்டு விடமுடியும்.

வெப் துனியாவிலிருந்து நண்பர் அண்ணா கண்ணன் சனிக்கிழமை இரவு தொலைபேசியிருந்தார். புயலைப் பற்றி எழுதி வெப் துனியாவுக்கு போட்டோவுடன் அனுப்புங்கள் என்றார். நானும் மிக எளிதாகவே நினைத்துக்கொண்டு அதற்கென்ன, அப்படியே என்று சொன்னவன்தான்.

ஆனால் அடுத்த வந்த நாட்களில் எதை எழுதுவது, எப்படி எழுதுவது, என்று புரியாமல் இருந்தது வாஸ்தவம்தான்.

அந்த மறக்கமுடியாத ஞாயிற்றுக்கிழமையன்று வந்த இந்தப் புயல் இந்த நகரத்துக் கரையைக் கடந்து போனபோது தன்னுடன் கூட்டிக் கொண்டு போன அலைபேசி இணைப்புகளை விடாப்பிடியாகப் போராடி மீட்டுக் கொண்டு வந்து கொடுத்ததைச் சொல்லலாமா, இல்லை..
மனித உயிர்கள் பறிக்கப்படவில்லையே என்ற கோபத்துடன் கண்ணில் கண்ட மரங்களையும், மின்சாரக்கம்பங்களோடு, தொலைபேசிக் கமபங்களையும் வேரோடு சாய்த்துச் சென்றதைப் பற்றிச் சொல்லவா..
சக்தி (பவர்) இல்லையேல் இயக்கமில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக சாதி மத பேதமில்லாமல் உணர்த்த வந்து இந்த அனுபவத்தை எப்படிச் சொல்வது.. மின்சாரம் இல்லாமையால் எதையுமே இயக்கமுடியாத நிலையில் வைத்திருக்கும் இந்த உலகத்தை இந்தவிதமாக இந்த சமயத்தில் ஏன் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று அடிக்கடி வந்து போன கோபத்தைச் சொல்வதா? 

இதுதான் வாழ்வில் கடைசி தருணமோ என்று நினைத்து வருத்தப்படும் மக்களின் கவலை தீர்ந்ததுதான் என்றாலும் அந்தக் கவலைக்குப் பின் வந்த தொடர் துன்பங்களைத் துயரப்படாமல் தாங்கிய தைரியத்தைச் சொல்வதா..

எது வந்தாலும் உங்களுக்கு அண்டமாக உங்களுக்கு அருகேயே உங்கள் குறை தீரும் வரை இருப்பேன் என்று மக்களிடையே மக்களில் ஒருவராய் ஒரு முதலமைச்சர் இருந்த அதிசயத்தைச் சொல்வதா

குறைகள் பல இருந்தாலும் முணுமுணுக்காமல் பணியாற்றிய இந்த அரசு சேவகர்களைப் பற்றி சொல்வதா

ஏறத்தாழ ஒருகோடியே ஐம்பது லட்சம் மக்கள் கஷ்டங்களில் வசிக்க ஆனாலும் அரசாங்கத்திடம் அதிகம் எதிர்பார்க்காமல் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்யும் இந்தப் பகுதி மக்களைப் பற்றிச் சொல்வதா..

எதைச் சொல்வது, எதை எழுதுவது என்பது புரியாமல் ஏதோ கண்ணில் கண்ட காட்சியை மட்டும் அவசரம் அவசரமாக விவரித்து, கிடைத்த ஒரு துளி இன்வெர்டர் மின்சாரத்தில் அண்ணா கண்ணனுக்கு அன்றே அனுப்பி விட்டு பின் நிதானமாகத்தான் பவர் வந்த பிறகுதான் அதன் சக்தி கொண்டு எழுத ஆரம்பித்தேன்.  

ஆனாலும் எப்பேர்ப்பட்ட ஒரு அனுபவம் என்பதை மட்டும் வாழ்க்கையில் இந்த மக்களுக்கும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான் என்பதை மட்டும் சொல்ல ஆசை எழுகிறது.. அந்த அனுபவத்தை நேரில் அனுபவிக்கும் பாக்கியத்தை அல்லது அபாக்கியத்தைப் பெற்றவன் என்கிற முறையில் உங்களோடு பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். சாதாரணமான ஞாயிற்றுக் கிழமையா அது.. ஞாயிறே தோன்றாமல் போய்விடுமோ என்று வானத்தை அப்படியே வருணபகவானும், வாய் பகவானும் கட்டிப்போட்ட விந்தையை எப்படி விவரிக்கமுடியும் என்று தெரியவில்லைதான்.
”திவாகர்.. உங்களுடன் நான் பேசும் கடைசிப் பேச்சாக இது இருக்குமோ என்று அஞ்சுகிறேன்.. என்னுடைய கைபேசியில் சார்ஜ் இல்லை.. மங்கி வருகிறது. எங்கள் ஃப்ளாட் மூன்றுமுறை ஆடிவிட்டது.. எல்லோரும் கீழேதான் இருக்கிறோம்.. பீச் ரோட்டில் பல கட்டடங்களில் மக்கள் இந்த நிலைதான்.. இறைவன் அருளால் நன்றாக இருந்தால் மறுபடி சந்திப்போம்.. பை சார்!!”

துறைமுகத்தில் பெரிய பதவியில் இருக்கும் ஒரு நண்பரின் இந்த பேச்சுதான் என்னுடைய ஏர்-டெல் இணைப்பு கைபேசியில் கடைசி பேச்சாகும்.. ஞாயிறன்று சுமார் பதினொன்று மணியளவில் இந்த பேச்சோடுஎன் இணைப்பும் மங்கிப்போய்விட்டதுதான். ஏர்டெல், ஐடியா, டாடா என இந்த மூன்று இணைப்புகளுமே செயலழிந்து போன நிலையில் பி எஸ் என் எல் மட்டும் உயிர் பிழைத்து எங்களை மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொள்ள வைத்திருந்ததைப் பாராட்டத்தானே வேண்டும்.

நாங்கள் இருந்த கட்டடம் ஆடியது என்பது அந்தச் சமயத்தில் ஏனோ அபாயமாகத் தோன்றவில்லை.. ஏனெனில் நகரத்தில் அத்தனை அடுக்கு மாடிக் கட்டங்களுமே அவ்வப்போது ஆட்டம் கண்டுகொண்டுதான் இருந்தன.. எங்கள் அடுக்கு மாடியும் அவைகளில் ஒன்று என்பதால் அத்தனை குடும்பங்களும் கீழே வந்து சற்று ஒதுங்கியும், எதிர்பார்த்தவிதத்தில் கட்டடம் நொறுங்கினால் உடனே வெளியேற சித்தமாகவும்தான் இருந்தோம். குழந்தைகளும் பெரியவர்களும் சற்று முன்னரே இருக்கவைத்தோம்.. காற்று மிக அதிக வேகத்தில் வீச வீச காற்றோடு அதிகபட்ச மழையும் தொடர எதையும் எதிர்பார்க்கும் விதத்தில்தான் அந்தக் கணத்தில் இருந்தோம்.

ஞாயிறன்று காலையிலிருந்தே அதிவேகப்புயல் மழையோடு தாக்கத் தொடங்கிவிட்டது. புயலும் மழையும் யாருக்குமே சகஜம் என்பதால் காலைக்கடன்கள் எல்லாமே சகஜமாகத்தான் இருந்தன. மின்சாரம் ஒன்று மட்டுமே இல்லையென்பதால் இதுவும் சகஜம்தானே என்றுதான் அன்று காலையில் எங்கள் மனநிலை இருந்தது. ஒன்பது மணி தாண்ட அந்த அதிவேகக் காற்று இன்னமும் வேகம் பிடித்தது.. நான் காற்றைப் படம் பிடிக்க மேல் தளத்துக்குச் சென்றுவிட்டேன்.. 

கீழே வந்ததும் மேலும் மேலும் தீவிரமடைந்தபோதுதான் கவனித்தோம்.. நாங்கள் இருந்த கட்டடம் ஒருமுறை அதிர்ந்தது. ஆனாலும் மழை தீவிரமாக இருந்து வராண்டா முழுவதும் தண்ணீர் நிலைக் கதவு வழியாக உள்ளேயும் வர ஆரம்பித்தது. . இத்தனைக்கும் நாங்கள் இருந்த நான்காவது மாடியில் ஏறத்தாழ எட்டடி இடைவெளியில் நிலைக்கதவு  உள்ளே தள்ளி இருந்ததுதான். அப்படியும் அந்தக் கதவை மிகப் பலமாக காற்றும் மழையும் தட்டி உடைக்க ஆரம்பிக்க, நாங்கள் உள்ளேஇருந்து அந்தக் கதவை அடைக்க உள் வராண்டாவில் இருந்த சோபா இருக்கைகளை அந்தக் கதவை நெருக்கி வைத்துப் பார்த்தோம். இந்தச் சமயத்தில்தான் இரண்டாவது முறையாக கட்டடம் அதிர்ந்தது. மேலும் அங்கு இருக்க விரும்பாமல் எங்கள் நான்காவது மாடியில் வந்து அனைவரையும் கீழே செல்லும்படி சொன்னவுடன், ஏற்கனவே பீதியில் இருந்தவர்கள் படிக்கட்டு வழியாக கீழே இறங்கினர். இத்தனை பீதியிலும் ஒரு குடும்பத்தினர் தங்கள் நகைகளையும், கேஷ் போன்றவைகளையும் ஒரு பெட்டியில் போட்டு எடுத்து வைத்திருந்து கீழே தன்னுடன் கொண்டு சென்றனர். (பெட்டியில் என்ன என்று கேட்டபோது செவியில் ரகசியமாகச் சொன்னார்). ஏறத்தாழ பதினைந்து குடும்பங்களுடன் வெளிப்பக்கம் குடிசைகளில் இருந்த நான்கு குடும்பங்கள் அந்தக் கீழ்ப்பகுதியில் மழையையும் புயலையும் பார்த்துக் கொண்டே காலம் நகர்த்தினோம்.
நான் கீழே எனது காரில் உட்கார்ந்து எஃப் எம் ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டே மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன்.. கரைக்கு 40 கி,மீ அருகே வந்துகொண்டிருப்பதாகவும் விசாகப்பட்டினத்தருகே எந்த நேரத்திலும் கரையைக் கடக்கலாம் என்று சொன்னபோதும் அந்த எஃப் எம் செய்தியாளர் சொன்னபோது அவர் குரலில் இருந்த பீதி எல்லோர் வயிற்றையும் கலக்கியதுதான்..

இந்த சமயத்தில்தான் மேற்கண்ட போன் வந்தது.. எல்லோருக்கும் தெரியப்படுத்தினேன்.. நாம் எல்லோருமே ஒரே நிலைமையில்தான் என்பதில் எல்லோருமே தெரிந்து வைத்திருந்தனர். அடுத்த அரை மணிநேரத்தில் மணிக்கு 200-220 கிமீ வேகத்தில் (பின்னர்தான் இந்தக் கணக்கு விவரம் தெரிந்தது) காற்று வீச காலை நன்றாக ஊனிக்கொண்டு நின்று கொண்டிருந்த எங்களை அப்படியே முன்னே தள்ள ஆரம்பித்தது. பெரியவர்கள் குழந்தைகள் சுவற்றின் பின்னால் கெட்டியாக சாய்ந்து கொண்டனர். குழந்தைகள் பீறிட்டுஅலற யாருக்கு என்ன செய்வது என்பது புரியாத நிலை.. கீழ்வீட்டுக் காரர் தன் கடைசிகாலம் என்று ஏதோ சொல்ல அது சரியாக காதில் செல்லாமல் காற்று அப்படியே அள்ளிக்கொண்டு போனதுதான்..எங்கேயோ பக்கத்தில்தான் கரையைக் கடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. கரையைக் கடந்த போது நாங்கள் இருந்த கட்டடம் இன்னொரு முறை ஆட்டம் கண்டதை அனைவருமே உணர்ந்தோம்.. 

சற்று நேரம் கழித்து காற்று ஒரேயடியாக நின்று போனது மழை மட்டும் நிதானமாக இருந்தது. அப்பாடி பிழைத்தோம் என்று ஒவ்வொருவரும் அவரவர் இல்லத்தில் சேரும்போது மறுபடியும் அந்தக் காற்று அதே வேகத்துடன் வீசத்தொடங்கியது. இப்போது ஒரு விஷயம் புரிந்தது. காற்றுக் கரையைக் கடந்த போது வீசுவது சற்று நேரம் நிற்கும் என்றும் பின்னர் கரையில் தன் வேகத்தைத் தொடரும் என்றும் ஏற்கனவே புயல் மையம் தெரிவித்திருந்தது. ஆனால் போகப்போக அது வலுவிழக்கும் என்பதாகவும் சொல்லி இருந்தார்களாதலால் சற்று நிம்மதியுடன் இருந்தோம்.. ஆனால் மழை மிக அதிகமான அளவில் காற்றின் வேகம் சிறிதளவும் குறையாமல் இருந்தது.. ஆனால் காற்றின் திசை மாறி இருந்தது. காலை வரை கிழக்குத் திசையிலிருந்து மேற்காக வீசிய காற்று இப்போது மேற்கிலிருந்து கீழைதிசை நோக்கி வீசியது. அத்துடன் மட்டுமல்லாமல் அடுத்தவீட்டு அடுக்கு மாடி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் ஏதோ கல்வீச்செறிவது போல சர்வ சாதாரணமாக வந்து கொண்டிருந்தன. பால்கணியும் போக முடியாமல், வெளியேயும் வர முடியாமல்வேறு யாரோடும் பேச முடியாமல் இருக்கும் ஒரு நிலை.. ஏறத்தாழ மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான் கொஞ்சம் வெளியே வரமுடிந்தது.. வெளியே மரங்கள் ஒன்று கூட இல்லாமல் அத்தனையும் கீழே கிடக்க, மின்சாரக் கம்பங்கள் ஒடிந்து அல்லதுபிடுங்கப்பட்டுக் கிடக்க ஆங்காங்கே ஜன்னல் கண்ணாடிகள் ஒடிந்துபோய் பளபளவென ஒளிற இப்படியுமா ஒரு அழிவு என்பதைக் கண்ணால் கண்டபோது கண்ணீர்தான் வந்தது.

வானிலை அறிவிப்பு அலுவலக நிர்வாகி சொன்னது, இந்த 220 கி.மீட்டர் வேகத்தில் வந்த புயலானது விசாகப்பட்டினத்தில் தாக்கியதில் நகரம் இந்த சிறிய அளவிலாவது தப்பிப் பிழைக்கப் பெரிய காரணம் நகரைச் சுற்றி உள்ள மலைகள்தான், என்றார். 220 கி.மீ வேகத்தை மலைகளும் தாங்கிக் கொண்டதால் அந்த அதிவேகத்தின் தாக்கம் நகரத்தின் மீது அவ்வளவாகப் படவில்லை என்றும் சொன்னார். கட்டங்கள் ஆடியதே என்று கேட்டதற்கு இதெல்லாம் 180 கி,மீட்டருக்கே ஆடும், ஆனால் 220 கி.மீட்டர் வேகத்தில் நாசங்கள்தான் அதிகமாக விளையும், உயர் அடுக்கு மாடிக் கட்டடங்கள் தாளாது அந்த வேகத்தை, என்றார். அதே சமயத்தில் நகரத்தில் உள்ள அதிக அளவிலான மரங்கள் மக்களுக்குப் பதில் தாம் விழுந்து மிகச் சிறந்த தியாகத்தைச் செய்துள்ளன என்று அவர்பாணியில் வர்ணித்தார். மரங்கள் விழுந்ததால் மனிதர்கள் மரத்தின் அடியில் பட்டு ஏறத்தாழ நாற்பது பேர் இறந்தனரென்பதையும் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர் என்பதையும் அவர் சொல்லவில்லை.. இரண்டு நாட்கள் கழித்து அரசாங்கம் சொல்லியது.
மனிதர்களின் கதியே இதுவென்றால் கால்நடைகளையும், பறவைகளையும் பற்றிச் சொல்ல இயலாது, கால்நடைக்காவது துணையாக மனிதன் இருக்கின்றான். ஆனால் இருப்பிடங்களான மரங்களை பரிபூரணமாக இழந்த பறவைகளின் கதி.. பரிதாபம்தான்..

இந்தப் பகுதி மக்களின் ஒற்றுமை எனக்குப் பிடித்திருந்தது. சிரமகாலத்தில் மட்டுமே ஒருவருக்கொருவரின் உதவி என்பது இன்றியமையாதது என்பதை நிரூபித்தனர்.. பல அடுக்கு மாடிக் கட்டடங்களில் இப்படிப்பட்ட சிரமங்கள் வந்தபோது துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டார்கள். இங்கு ஒதுக்குப்புறமான நகரப் பகுதியில் முப்பது வீடுகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்போர் மூன்று நாட்களுக்குக் கூட்டுச் சமையல் செய்து பகிர்ந்து உண்டனர் என்பதை ஹிண்டு நாளிதழ் ஒரு அதிசயச் செய்தி போல கட்டம் கட்டி வெளியிட்டிருந்தது.

எங்கள் குடியிருப்பிலும் இந்த ‘அதிசயம்’ நிகழ்ந்ததுதான். ஒருவருக்கொருவர் அதிகம் தொடர்பில்லாமல் பழகிப் போய்விட்டபடியால் முதலில் சற்று சங்கோஜப்பட்டாலும் பின்னர் சரியாகிவிட்டதுதான்.. அதைப் போல கீழ் மாடியில் வசிக்கும் ஒருமுஸ்லீம்குடும்பப் பெண்மணி ஞாயிறன்று பகல் வேளையில் ஏறத்தாழ முப்பது பேருக்கு (வெளியே இருந்து புகலிடம் கேட்டு வந்த நான்கு குடும்பங்களுக்கும் சேர்த்து) பிரியாணி செய்து பகிர்ந்து கொண்டார். நாங்களும் எங்களிடமிருந்த அனைத்து ரெடிமேட் உணவு வகைகளையும், பழங்களையும், கொடுத்து விட்டோம். ஞாயிறன்று காலை பலமாக சாப்பிட்ட எங்கள் காலை உணவு கைகொடுக்க, ஊரில் தக்காளி மட்டுமே தனியொரு காய்கறியாக ஆட்சி செய்ய, அடுத்த நான்கு நாட்களுக்கும் தக்காளியை வைத்தே தினம் தினம் வேளா வேளைக்கு விதம்விதமான வகையறா செய்து சாப்பிட்டோம்.
தொலைபேசி இணைப்பில் பி.எஸ்.என் எல் பங்கு மிகச் சிறப்பானது.அத்தனை தனியார் இணைப்புகளும் புயலில் தொலைந்து போக மிகத் தைரியமாக இந்த அதிவேகக் காற்றை எதிர்த்துப் போராடிய இந்த அரசாங்கக்கம்பெனியை எத்தனைப் பாராட்டினாலும் தகும். 
இந்த பி.எஸ்.என்.எல் உதவியால்தான் ஏதோ என்னால் கொஞ்சம் (என் மனைவியின் கைபேசி துணையுடன்) வெளியாருடன் உலாவவும் பேசவும் முடிந்தது. அவ்வப்போது முகநூலில், இருக்கும் கொஞ்ச நஞ்ச சார்ஜ் கொண்டு, தகவல்களையும் தர முடிந்தது.
எங்களுக்கு ஜெனரேட்டர் உதவி ஏற்கனவே இருந்தாலும் டீஸல் கிடைப்பது சிரமமாக இருந்ததால் இருக்கும் எண்ணெயைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருந்தோம். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே.. அதற்குள் போன் பேட்டரி ரீசார்ஜ் செய்து விடுவோம். ஜெனரேட்டர் இருந்ததால் மட்டுமே எங்களால் நிலத்தடி நீரைப் பயன்படுத்தமுடிந்தது.. அதே சமயத்தில் ஜெனரேட்டார் இல்லாத பல அடுக்கு மாடி வீடுகளின் நிலைமை படு மோசமாக இந்தத் தண்ணீர் விஷயத்தில் இருந்தது. ஹிண்டு’வில் ஒருசெய்தி வந்திருந்தது. அதாவது ஒரு இளம்பெண் தான் இரண்டுநாட்களாகக் குளிக்கமுடியவில்லை என்றும் அடுத்த நாள் தன் பிறந்ததினம் வருவதாகவும் யாராவது ஒரு வாளி தண்ணீர் பிறந்த நாள் பரிசாகத் தந்தால் மகிழ்ச்சியடைவேன், என்பதாகவும் செய்தி போட்டிருந்தனர். மின்சாரம் இல்லாததால் குடிதண்ணீரும் தரமுடியாத நிலையில் நகரம் இருந்தது. ஏதோ இரண்டு நாட்களாகத்தான் பெரிய ஜெனரேட்டர் கொண்டு வந்து குடிநீர் பம்பிங் செய்து அனுப்புகிறார்கள். மின்சாரம் இல்லாததால் ஊரில் மெழுகுவர்த்திதட்டுப்பாடு.. ஒரு சாண் ஒல்லி மெழுகுவர்த்தி ஐம்பது ரூபாய் வரைக்கும் சென்றது.

இரவானால் வீட்டில் மட்டுமல்ல, ஊரெங்கும் இருட்டுதான் என்பதால் வெளியே பயணம் செய்வோர் மிகக் குறைவு. அப்படியும் பயணம் செய்பவர்கள் சாலையில் கிடக்கும் மரக்கிளைகளைத் தாண்டிச் செல்வதென்பது இன்னமும் கடினம்தான். நகரம் பகலிலேயே கோரமாகக் காட்சியளித்ததுதான் என்றாலும் இருளில்கேட்கவா வேண்டும்?
சென்ற ஞாயிறு விடுமுறை தினமாகப் பார்த்து இந்த புயல் வந்தாலும் எங்கள் மேல் கரிசனம் கொண்டு அடுத்து வந்த ஏழு நாட்களுக்கும் விடுமுறையை எல்லோருக்கும் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டதுதான்.. யாரும் வேலைக்கோ, தனியார் கம்பெனி அலுவலகத்துக்கோ சென்ற வாரம் முழுதும் செல்லவில்லை.. அப்படியே வீட்டில் அடைந்து கிடந்தனர். இதனால் குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் அதிகமாக நடக்க வாய்ப்புண்டு என்றாலும் அந்நியோன்னியத்துக்குக் கூட அதிக வாய்ப்புண்டுதானே..

எர்லி டு பெட், எர்லி டு ரைஸ் என்பார்களே.. அது கிட்டதட்ட எல்லோருமே கடைபிடித்தார்கள். போன் இணைப்புத் துண்டிக்கப்பட்டதால் அடுத்தவருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதும் ஒரு காரணம் என்றாலும் மிகப் பெரிய காரணம் தொலைக்காட்சி வசதி துண்டிக்கப்பட்டதுதான்.. இன்றோடு பதினைந்து நாட்கள் ஆயிற்று தொலைக்காட்சியைப் பார்த்து.. (நல்லதுதானே என்று பலர் சொல்வார்கள்).. ஆனாலும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒருகோடியே ஐம்பது லட்சம் பேர் தொலைக் காட்சியை இத்தனை நாட்களாகப் பார்ப்பதில்லை (பார்க்கமுடியவில்லை) என்பதையும் தெரிந்து கொண்டால், இந்தக் காலகட்டத்திலிது ஒரு பெரிய அதிசயமே.

இன்னொரு அதிசயம் இங்கு தீபாவளி இந்தமுறை பட்டாசு சப்தமில்லாமல், வெடிக்கப்படாமல் கொண்டாடியதைச் சொல்லவேண்டும். ஏற்கனவே வாயுதேவனும் வருணபகவானும் மாறி மாறி வறுத்தெடுக்கையில், மரங்களெல்லாம் பிடுங்கப்பட்டும் பறிக்கப்பட்டும் குப்பைக் கூளமாய்க் குவிந்திருக்கையில் ஒரு சிறு தீப்பொறி பட்டாலே போதும் ஒரு அக்கினிக் காடொன்று உருவாக. இந்த நிலைமையில் அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மக்கள் யாருமே வெடி வெடிக்கவில்லை என்பதோடு அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர் என்பது ஆச்சரியமான உண்மைதான்.

எதிர்காலத்தில் எதையுமே எதிர்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையையும் ஹூட் ஹூட் கொடுத்துவிட்டுப் போயுள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இயற்கையின் மாபெரும் சக்தியின் முன் மனிதர்கள் எம்மாத்திரம் என்ற வேதாந்தக் கருத்து எடுபட்டாலும், இயற்கையின் இன்னொரு பக்கத்தைச் சந்திக்கும் மனோதைரியம் இருந்தால் மனம் பக்குவப்படும் என்றும் புரிந்தது. இதுவும் ஒரு நன்மைதானே.

இயற்கையே நீ அழகு என்று
இனி ஒரு வார்த்தை சொல்லுமுன் கொஞ்சம்
உன் இன்னோரு பக்கத்தையும் நினைக்க வைக்கிறாய்..
நீ அழகுதான்.. ஆனால் அதிஆபத்தான அழகு!!
                           ************************ 

படங்கள் 1. விசாகப்பட்டினம் ஏர்போர்ட் மேல்கூரை எல்லாம் ஒடிந்து போய் விழுந்த அலங்கோலம்.
2. இடம் ஒன்றே, முதல் படம், புயலுக்கு முன்னே மரங்களுடன்
3. பக்கத்தில் புயலுக்குப் பின்னேமரங்களெல்லாம் அழிந்தவுடன் 
4. அரக்கு வேல்லி மலி ரயில்பாதை சிதைந்து போன காட்சி
5. மரங்கள் நிறைந்த துரைமுகப் பூங்காவன் மரங்களழிந்து மங்கலம் இழந்த அலங்கோலக் காட்சி
6. சிமெண்ட கலவையால் கட்டப்பட்ட மின்கம்பம் உடைந்த கோலம்..

Monday, June 2, 2014

ஆந்திரமும் திரிசங்கு நிலையும்


இன்று தெலுங்கானா என்ற மாநிலம் பிறந்த சுபதினம். மொழி ஒன்றாயினும் கருத்து வேறுபாடு அதிகம் கொண்ட மக்கள் தம்மை அந்த வேறுபாட்டிலிருந்து பிரித்துக் கொண்ட நல்ல நாள் என்றே சொல்லவேண்டும்.

தெலுங்கானா போராட்டம் பற்றி ‘அடுத்த வீட்டில்நிறைய எழுதியாகிவிட்ட்து. இது நன்மையா தீமையா என்ற ஆராய்ச்சிகள் எல்லாம் செய்தாகிவிட்ட்து. ஆனாலும் விளைவு என்ற ஒன்று உருவானபின், அந்த விளைவின் பயனை அவர்கள் அதாவது தெலுங்கானா மக்கள் அனுபவித்தே ஆக வேண்டும் இல்லையா.. நல்ல விளைவாக என்றும் அமைய ஆண்டவனை வேண்டுவோம்.

இதுவரை தெலுங்கானா வேண்டாம், அல்லது வேண்டும் என்றே விவாதங்கள், போராட்டங்கள் அமைந்தன. இனி, தெலுங்கானா நிரந்தரமாக பிரிக்கப்பட்டு விட்டதால் என்னென்ன நன்மைகளை விளைவிக்கலாம் என்றுதான் விவாதிக்கவேண்டும். பழைய விவாதங்கள் எல்லாமே இனி ஆறிய கஞ்சி, பழங்கஞ்சிதான்.. யார் யாரை அதிகமாக அந்தக் கால கட்டத்தில் திட்டினார்கள் என்பதெல்லாம் இனி ‘ரெபரன்ஸ் கைட்ஆக மட்டுமே பயன்படுத்தட்டும்.  ஆகவே இனி இரு மாநிலங்களும் முன்னேற்றப் பாதையை நோக்கி மட்டுமே செல்லவேண்டும்.. வேறு வழியே இல்லை.. இன்னமும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு காலம் கழித்தார்களேயானால் இவர்களை விட ஒரு நாட்டுக்கு துரோகம் செய்தோர் எவரும் இருக்கமாட்டார்கள் என்று கூட சொல்லிவிடலாம்.

உடைக்கப்படாத ஆந்திரமாநிலத்தில் ஹைதராபாத் மகாநகரம் தெலுங்கானா மாநிலத்தின் உட்பகுதியில் உள்ளதால் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக அமைவதற்கான நியாயம் அதிகம் உள்ளதுதான். ஆனால் அங்கு ஆந்திரர்கள் அதிகம் உள்ள ஒரே காரணத்தால் தெலுங்கானாவுக்கு அந்நகரைத் தரமாட்டோம் என்ற ஆந்திரர்களின் பிடிவாதமும் ஆந்திரத்தோடு சேர்த்து உடைக்கப்பட்டதுதான். அப்படி உடைக்கப்பட்டதால் கிடைத்த நஷ்ட ஈடு ஹைதராபாத் இருமாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக ஒரு பத்து வருடம் இருக்க மத்திய அரசு சம்மதித்திருக்கிறது. ஆனால் எல்லைப் பகுதியே இல்லாத ஹைதராபாதில் ஆந்திரர்கள் எப்படி தலைநகராக நினைத்து ஆளமுடியும்.. இது முடியாதுதான்.. அதனால்தான் ஆந்திர முதல்வர் நாயுடு ஏற்கனவே குண்டூர் மாவட்டம் மங்களகிரி-நம்பூரில் (விஜயவாடா-குண்டூர்நகர மத்தியில்) தலைநகரம் அமைப்பதற்கு சித்தமானதோடு மட்டுமல்லாமல் வாரம் மூன்று நாட்கள் அங்கே அலுவலகமும் இப்போதே வைத்துவிட்டார். அரசாங்கத்துக்கான பட்டாபிஷேகம் கூட அங்கேதான். (படத்தில் சந்திரபாபு நாயுடுவின் தற்காலிக நம்பூர் நிவாசம்)

ஆந்திரர்கள் ஹைதராபாதைக் கைவிட்டுவிட மனதளவில் முயன்று வருகிறார்கள். இதனை ஆந்திரர்கள் நல்ல அறிகுறியாகத்தான் கருத வேண்டும்.முக்கியமாக இன்று ஆந்திரா அதாவது சீமாந்திரா அநாதையாகத்தான் நடுத்தெருவில் நிற்கின்றது என்பதை வெட்கமில்லாமல் சொல்லலாம். தலைநகர் இல்லை.. ஆந்திர அரசாங்கம் இருந்து செயல்படவேண்டிய இடம் திரிசங்கு சொர்க்கம் போல இந்த மூன்று வருடங்கள் (புதிய தலைநகரம் கட்டமைப்புகள் முடிவு பெரும் வரை) ஹைதராபாதில் பாதி குண்டூர் நம்பூரில் பாதி என அலையவேண்டும். இந்தக் கணம். நிதி ஆதாரமோ அதிகம் இல்லை. இப்போது மிகவும் குறைவான ஆதாரத்தோடு ஆரம்பிப்பதால், ஆதி அடிப்படையிலிருந்து ஆரம்பித்து செயல்படவேண்டிய நிலையில் உள்ள மாநிலம் இது. தலைநகரமான ஹைதராபாதிலிருந்து வரும்படி சரிவிகித்த்தில் பிரிக்கப்படும் என்றாலும் ஏறத்தாழ ஆந்திர அரசாங்கத்துக்கு கையேந்தும் நிலைதான் கண்ணின் முன் தெரிகிறது. மத்திய அரசு ஏற்கனவே வாக்களித்தபடி பல்லாயிரம் கோடி ரூபாய்கள் ஆந்திரத்துக்காக செலவழிக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஆனால் முழுமையாக நல்ல கட்டமைப்போடு தலைநகரம் அமைப்பதற்கு எப்படியும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஏற்படலாம். எப்படியும் ஏராளமாகச் செலவிடவேண்டும். தலைநகரம் அமைவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் ஆந்திரா பிரிந்தது நம் நன்மைக்கே என்று இங்கே பேச ஆரம்பித்து விட்டார்கள். 

திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற நகரங்கள் ஹைதராபாதுக்கு இணையாக கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு மகாநகரமாக மாற்றவேண்டிய அவசியத்தினை எல்லோருமே உணர்ந்திருக்கிறார்கள். மாநிலத்தில் மத்தியிலுள்ள விஜயவாடா நகரத்தருகேயே தலைநகர் அமைவதால் இயற்கையாகவே அந்த நகரம் பலப்படுத்தப்படும். வடக்கில் உள்ள விசாகப்பட்டினம் ஏற்கனவே உடையாத ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டாவது மகாநகரமாகும். ஹைதராபாதுக்கு சமானமாக அரசாங்கத்தார் இந்த நகரத்தில் ஒன்றையுமே செய்யாவிட்டாலும் நகரவளர்ச்சி மிகப் பெரிய அளவில் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். கொச்சி, பூனா அளவுக்கு வசதியான விசாகப்பட்டினம் இந்த ஆந்திர உடைப்பினால் மிகப் பெரிய பலன் பெறப் போகிறது என்றுதான் ஆட்சியாளர் முதற்கொண்டு சொல்கிறார்கள். அதேபோல தெற்கே திருப்பதியும் மிகவும் விரிவுப்படுத்தப்படக் காத்திருக்கிறது.
நாயுடுகாரு ஹைதராபாத் வளர்ச்சிக்கு வெகுவாக வித்திட்டவர். அதே நாயுடுகாரு விஜயவாடாவும் விசாகப்பட்டினமும் திருப்பதியும் மிகப் பெரிய மாநகர் ஆகவேண்டுமென நினைத்து அந்த நினைப்புக்கு திருவேங்கடவனும் தலையசைத்தால் நிச்சயம் விரைவில் மிகப் பெரிய மூன்று நகரங்கள் சீமாந்திராவில் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லைதான். மூன்று முத்தான நகரங்கள் வாய்த்தால் ஆந்திரத்துக்கே பெருமைதானே.

எல்லாம் நனமைக்கே.. அதே சமயம் ஹைதராபாதின் கதி இனி எப்படி இருக்கப்போகிறது. ஹைதராபாத் அடுத்த பத்தாண்டுகளுக்கு அங்குள்ள ஆளுநரால் ஆளப்படும் நகரமாக இருக்கும். ஆனால் தெலுங்கானாத் தலைவர்களுக்கு எதிரிகளாக அவர்கள் இதுவரை பார்ப்பது ஆந்திரக்காரர்களையும் ஆந்திர நிலமுதலாளிகளையும்தான். இந்தப் பகை நிலை பல்லாண்டுகாலமாக அவர்களிட்த்தே இருக்கும் உணர்ச்சி என்பதையும், அந்த உணர்ச்சியை மக்கள் மத்தியிலே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தூண்டிவிட்டுப் போராடியவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். உணர்ச்சி வேகத்தில் முன்னூற்றுக்கு அதிகமானவர்கள் உயிர் கொடுத்து அந்த்த் தியாகத்தில் பெறப்பட்ட்துதான் தெலுங்கானா. மிகச் சரியான அளவில் அந்த உணர்ச்சித் தீயை அணையாமல் காத்தவர்கள் அந்த அரசியல்வாதிகள். ஆகையினால் எத்தனைதான் ஆளுநர் ஆட்சியில் பாதுகாப்பாக ஆந்திரமக்கள் ஹைதராபாதில் வசித்தாலும் ஒரு நிச்சயமற்ற தன்மையில்தான் அங்கு வசிக்க நேரிடும். இந்த நிச்சயமற்ற தன்மையை அவ்வளவு சீக்கிரத்தில் நம்பிக்கையாக மாற்றும் சாமர்த்தியம் நம் அரசியல் வாதிகளிடையே கிடையாது. வேண்டுமானால் குழந்தையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிப் பார்ப்பார்களோ என்னவோ.. ஆந்திரர்கள்  நிம்மதியாக வாழவேண்டுமானால் விசாகப்பட்டினம் போன்ற பெரு நகரங்கள் உருவாக்குவதுதான் ஒரே வழி. வேலைவாய்ப்பைத் தேடி அந்தக் காலத்தில் தலைநகரம் சென்றவர்கள். அதே வேலைவாய்ப்பை மாற்று நகரத்தில் அதுவும் சொந்த மாநிலத்தில் உருவாக்கினால் நிச்சயம் ஹைதராபாத் வாழும் ஆந்திரர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்தான். இதனால் ஹைதராபாத் தேய்ந்துபோகும் என்றும் சொல்லமுடியாது. ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பதாக அங்கு காலியான இடங்கள் வெகு விரைவில் நிரப்பப்படும்.

ஏற்கனவே தலைநகர்மாற்றம் தலைமைச் செயலகம் மாற்றம் எனப்படும்போது ஹைதராபாதில் தற்சமயம் உள்ள ஏறத்தாழ ஐந்து லட்சம் மக்கள் சீமாந்திராவில் குடியேறித்தான் ஆகவேண்டும். மிகவும் அதிகமான அளவில் ஹைதராபாதில் இருப்பது மென்பொருள் பொறியாளர்கள்தான் (ஏறத்தாழ ஆறு லட்சம் ஆந்திர மாநிலத்தவர் மென்பொருள் உத்தியோகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பங்களோடு கணக்கிட்டால் ஏழு அல்லது எட்டு லட்சத்தைத் தாண்டும்)). உச்சகட்ட தெலுங்கானா போராட்ட காலத்தில் கூட இவர்கள் இருக்கும் இடங்களில் தெலுங்கானா வாதமோ கதவடைப்புகளோ போராட்டமோ என்றும் வெற்றி பெற்றதில்லை. ஆனால் ஆந்திர அரசாங்கம் இவர்களுக்கு ஆந்திரத்து நகரங்களில் இடவசதிகள் ஏற்பாடு செய்து, அந்த கம்பெனிகளுக்கு சில சலுகைகளை அளித்துக் கூப்பிட்டால் ‘லேப்-டாப்ப்போடு ஓடி வரத்தான் செய்வார்கள். மிக எளிமையான மாற்றம் இவர்களுடையது. அப்படி ஒருவேளை மென்பொறியாளர் இடமாற்றம் செய்யவேண்டி வந்தால் இதனால் மிகப் பெரிய அளவில் தெலுங்கானாவுக்கு ஏற்படும் நஷ்டம் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. இதை எந்த அரசாங்கமும் விரும்பாது. தெலுங்கானா அரசாங்கம் இந்த நிர்ப்பந்த்த்தை எதிர்பார்த்து அவர்களை பாதுகாப்போடு இருக்கவைக்கப் பாடுபட நேரிடும். இவர்களால் இப்போதைக்கு அரசாங்கத்துக்கு வரும் ஆதாயம் நின்று போனால் அரசாங்கத்தை ஏனையோர் எள்ளி நகையாடுவார். தெலுங்கானாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக மீட்கப்பட்ட ஒரு பகுதி பின்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்வதென்றால் அங்கு ஏளனம் வரத்தானே செய்யும்.

ஆகையினால் மென்பொருள் தொழில் செய்வோரை மிகவும் பெரிதாக தெலுங்கானா அரசாங்கம் ஆதரித்தே ஆகவேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. இந்தக் கட்டாய நிலை நிச்சயம் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் கூட. ஏனெனில் இவர்களுக்காகவாவது தெலுங்கானா அரசாங்கம் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டியதுதான். அடுத்து மருந்துமாத்திரைக் கம்பெனிகளில் வேலை செய்வோர். இங்கும் ஆந்திர்ர்கள் அதிகப்படியாக இருக்கிறார்கள். இந்தியாவின் மருந்து மாத்திரைத் தலைநகரம் என்றே அழைக்கப்படும் ஹைதராபாதில் இவர்கள் நிலை எப்படி இனி இருக்கும் என இனிமேல்தான் பார்க்கவேண்டும். ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் சிறிய அளவில் மருந்துமாத்திரை கம்பெனிகள் வரத்தொடங்கிவிட்டன. இவை ஏதேனும் பெரும் மாற்றத்துக்குக் கொண்டு செல்லுமா என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆந்திர்ர்கள் ஒருகாலத்தில் ‘மதராஸ் மனதேஎன்று தாமிருக்கும் இடங்களை விட்டுவிட்டு தமிழர்கள் பூமிக்காக வேண்டிப் போராடியவர்கள். ஆனால் மாநிலம் பிரிந்தவுடன் தலைநகரமாக்க் கிடைத்த அழகான கர்நூல் நகரத்தைக் கைவிட்டு நிஜாம் ஆண்ட ஹைதராபாதுக்கு ஆசைப்பட்டவர்கள். ஆனால் ஹைதராபாதும் போகும் என்று கடந்த நாற்பதாண்டுகளாகவே கண்கூடாகத் தெரிந்தும், தமக்கே உரிதான விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டின நகரங்களை முன்னேற்றாமல் ஹைதராபாதை ;கன்னாபின்னாவென முன்னேற்றிவிட்டு இப்போது அவஸ்தைப்படுகிறார்கள். ஆனால் இனியும் காலம் கடக்கவில்லை.. கடந்துபோன வரலாற்றைக் கடந்துவிட்டாயிற்று. இனி புதிய வரலாறு சொந்த மண்ணிலேயே எழுத ஒரு மாபெரும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. வாய்ப்புகளை வீணாக்காமல் ஒரு புதிய வரலாறு படைக்கவேண்டும். இதற்கு திருவேங்கடவன் அருள் ஏராளமாகக் கிடைக்கவேண்டும்..
திருவேங்கடவனை ‘ஆந்திரத்து விஷ்ணுஎன்று திராவிடமன்னர் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் தன் ‘ஆமுக்தமாலையில் வர்ணிக்கிறார். அந்த ஆந்திரத்து விஷ்ணு அநாதைகளாக இன்று இருக்கும் இந்த ஆந்திரர்களை நல்வழிப்படுத்தி உலகுக்கே பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு உயர்த்தவேண்டும்.
                             ************ 

படங்களுக்கு நன்றி கூகிளாண்டவர்

படம் மூன்று - விஜயவாடா கிருஷ்ணவேணி தீர்த்தகட்டம்

படம் நான்கு - விசாகப்பட்டினம் பீமிலி கடற்கரைச் சாலை

படம் ஐந்து: ஹைதராபாத் ஹூசைன் சாகரில் புத்தபிரான்

படம் ஆறு - திருவேங்கடவன்